அமெரிக்க ஜனாதிபதித் தோ்தலை ஒத்திவைக்கும் ட்ரம்ப்பின் யோசனைக்குக் கடும் எதிர்ப்புக்கள் எழுந்துள்ள நிலையில் தனது கருத்தில் இருந்து அவா் நேற்று திடீரென பின்வாங்கினார்.
தேர்தல் தாமதமாவதை நான் விரும்பவில்லை. திட்டமிட்டப்படி தேர்தலை நடத்தவே விரும்புகிறேன். ஆனால், அதன் முடிவுகளுக்காக பல வாரங்கள், பல மாதங்கள் காத்திருக்க விரும்பவில்லை என அவா் தெரிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. எனினும் தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் எதிர்வரும் நவெம்பர் 3-ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதித் தோ்தல் நடைபெறவுள்ளது.
இத்தோ்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக, தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் களமிறங்கி உள்ளார்.
இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தபால் மூலம் வாக்குகளை அளிக்கும்படி மக்களை ஜனநாயக கட்சி வலியுறுத்தி வருகிறது.
தொற்று நோய் அச்சம் காரணமாக வாக்குப்பதிவு மையங்களுக்கு செல்வது, வரிசையில் நிற்பதை மக்கள் தவிர்த்து விடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 70 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தபால் மூலமே வாக்குகளை செலுத்துவார்கள் என கருதப்படுகிறது.
இந்நிலையில் தபால் வாக்கு மூலம் தேர்தல் நடந்தால் முறைகேடுகள் நடைபெறும் சாத்தியம் அதிகம் உள்ளதாக ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.
இதனால் மக்கள் பாதுகாப்பாக வாக்களிக்கும் காலம் வரும் வரையில் தேர்தலை ஒத்தி வைக்கலாமா? என நேற்று முன்தினம் தனது ருவிட்டரில் ட்ரம்ப் பதிவிட்டார். இதை தோல்வி பயத்தால் டிரம்ப் கூறுவதாக ஜனநாயக கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்நிலையிலேயே தனது கருத்தில் இருந்து நேற்று திடீரென பின்வாங்கினார்.
தேர்தல் தாமதமாவதை நான் விரும்பவில்லை. திட்டமிட்டப்படி, தேர்தலை நடத்தவே விரும்புகிறேன். ஆனால், அதன் முடிவுகளுக்காக பல வாரங்கள், பல மாதங்கள் காத்திருக்க விரும்பவில்லை. பின்னர், வாக்குப்பெட்டிகளை கண்டுபிடிக்க வேண்டிய சூழல் ஏற்படும். அப்படி நடந்தால், தேர்தல் என்பதே அர்த்தமில்லாமல் போகும் என அவா் தெரிவித்துள்ளார்.