கொரோனாவுக்கு இந்தியா அரசியல் பிரமுகர்கள் இலக்காகிவரும் நிலையில் கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் பிஎஸ் எடியூரப்பா அடிக்கடி அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்திவந்த நிலையில் அவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இது குறித்து எடியூரப்பா இன்று தனது ருவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எனக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் தற்போது நலமுடன் உள்ளேன். மருத்துவர்களின் அறிவுரையின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த சில நாட்களாக என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் சுய தனிமைப்படுத்தலை பின்பற்றிக் கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 532 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 819 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 74,590 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 57 ஆயிரத்து 725 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து திரும்பியுள்ளனர். ஆனாலும், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அம்மாநிலத்தில் இதுவரை 2 ஆயிரத்து 496 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, கர்நாடகம்