லெகனான் – பெய்ரூட்டில் பேரழிவை ஏற்படுத்திய வெடிப்புச் சம்பவத்துக்கு பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் (ammonuim nitrate ) வேதிப்பொருளே காரணம் என லெபனான் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்துள்ளார்.
மிகவும் ஆபத்து நிறைந்த வெடிக்கக்கூடிய 2 ஆயிரத்து 750 தொன் அமோனியம் நைட்ரேட் 6 ஆண்டுகளாக துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அதுவே இந்தப் பாரிய அசம்பாவிதத்துக்குக் காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமோனியம் நைட்ரேட் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்ததை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்த கொடூர விபத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை கொடுக்கும் வரை நான் ஓயப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
பெய்ரூட்டில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இதுவரை 78 போ் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சுமார் 3700 போ் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவா்கள் பெருமளவானோர் ஆபத்தான கட்டத்தில் உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.