தொற்றுநோய் நெருக்கடிக்கு மத்தியில் அமெரிக்கா- கனடா எல்லைகளில் இரு நாட்டவா்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரித்துள்ளன.
அமெரிக்கா – கனடா எல்லைகள் அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக மூடப்பட்டிருந்தாலும் வணிக நடவடிக்கைகளுக்காகத் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கனடாவுக்குள் வரும் அமெரிக்க வாகன சாரதிகள் எல்லையில் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்கா – கனடா எல்லைகள் அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக மார்ச் 21 முதல் மூடப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 21 வரை இந்த எல்லை மூடல் ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும். எனினும் அமெரிக்காவில் தொற்று நோய் தொடா்ந்தும் தீவிரமாக இருப்பதால் அதன் பின்னரும் எல்லைகள் மூடப்பட்டிருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்ராறியோ முதல்வா் உள்ளிட்ட பல கனேடிய அரசியல்வாதிகள் எல்லைகள் தொடா்ந்து மூடப்பட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள்.
அமெரிக்கா – கனடா எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் இரு நாடுகளில் எல்லைப் பகுதிகளிலும் வாழும் மில்லியன் கணக்கான மக்கள் பொருளாதார ரீதியிலும் தனிப்பட்ட வகையிலும் மோசமான விளைவுகளை எதிர்கொண்டுள்ளனர்.
எனினும் பெரும்பாலான கனேடியர்கள் எல்லை தொடா்ந்து மூடப்பட்டிருக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள்.
கடந்த ஜூலை மாதம் இப்சோஸ் ரீட் நடத்திய கருத்துக் கணிப்பில் கனடியர்களில் பத்தில் எட்டு பேர் குறைந்தபட்சம் 2020 இறுதி வரை எல்லை மூடப்பட வேண்டும் எனக் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவில் தொற்று நோய் தொடா்ந்து தீவிரமாக உள்ள நிலையில் அமெரிக்காவில் இருந்து வணிகச் செயற்பாடுகளுக்காக கனடாவுக்குள் நுழையும் வாகன ஓட்டிகள் குறித்து கனேடியா்கள் அச்சமடைந்துள்ளனர். எல்லையில் அமெரிக்க வாகன ஓட்டிகளுக்கும் கனேடியக் குடிமக்களுக்கும் இடையே மோதல் போக்குகள் அடிக்கடி உருவாகி பதட்டம் நிலவி வருகிறது.
கனடாவுக்குள் நுழைவதற்கான அனுமதி இருந்தாலும் கூட தாம் துன்புறுத்தப்படுவதாக அமெரிக்க இலக்கத் தகடுகளைக் கொண்ட வாகன சாரதிகள் கூறுகின்றனர்.
இதனால் வணிக நடவடிக்கைகளுக்காக கனடாவுக்குள் நுழையும் வாகன சாரதிகள் அச்சமடைந்துள்ளனர் என கனேடிய குடிவரவு வழக்கறிஞரான சாண்டர்ஸ் கூறுகிறார்.
எல்லையில் பதட்டங்கள் அதிகமாக உள்ளதால் அமெரிக்க இலக்கத் தகடுகளைக் கொண்ட வாகனங்களை பயன்படுத்தும் கனேடியா்கள் உள்நாட்டுக்குள் பயணிக்கும்போது அந்த வாகனங்களைத் தவிர்த்து பொதுப் போக்குவரத்து, அல்லது மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்துமாறு பிரிட்டிஷ் கொலம்பியா முதல்வா் ஜான் ஹொர்கன் கோரிக்கை விடுத்துள்ளார்.