பிரேசிலின் உள்ள அமேசான் மழைக் காடுகள் பல இடங்களில் மீண்டும் தீப்பற்றி எரிந்து வருவதாக ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அவ்வாறு ஒன்றும் இல்லை. அங்கு தீப்பரவல் ஏற்பட்டுள்ள தகவல்கள் பொய் என பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ நேற்று செவ்வாய்க்கிழமை மறுத்துள்ளார்.
பிரேசிலில் பல பிராந்தியங்களில் உள்ள காடுகளில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக போல்சனாரோ அரசாங்கத்தின் பிராந்திய அதிகாரிகளின் தகவல்கள் உறுதி செய்துள்ளபோதும் அதனை மறைக்கும் வகையில் பிரேசில் ஜனாதிபதி ஊடகங்களிடம் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு பிரேசியில் அமேசான் காடுகளில் பெரும் தீவிபத்து உருவாகியதை அடுத்து உலக நாடுகளின் கவனம் பிரேசில் மீது திரும்பியது. விவசாயம் மற்றும் விலங்குப் பண்ணை விரிவாக்கம் உள்ளிட்ட வணிகங்களுக்காகவே காடுகள் தீட்டமிட்டுத் தீவைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுக்கள் பிரேசில் அரசு மீது முன்வைக்கப்பட்டன. எனினும் தீவிபத்துக்கு தனது அரசே காரணம் என்ற குற்றச்சாட்டக்களை ஜெய்ர் போல்சனாரோ உறுதியாக மறுத்தார்.
இந்நிலையில் தொலைதூர அமேசான் நகரமான அப்புய் நகரில் காடுகளில் தீப்பற்றி பெரும் புகை வானத்தில் எழுவதை ரொய்ட்டர்ஸ் சாட்சிகள் நேற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்தன.
அத்துடன் அமேசான் காடுகளுக்கு இயற்கையாக மனிதர் ஒருவா் தீவைக்கும் வீடியோ காட்சிகளும் ஆதாரமாக வெளியிடப்பட்டன. எனினும் இந்த ஆதாரங்களையும் பொய்யானவை எனவும் அமேசான் காடுகளில் எங்கும் தீப்பரவில் இல்லை எனவும் ஜெய்ர் போல்சனாரோ தெரிவித்துள்ளார்.
விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இன்பேவின் தரவுகளின்படி ஆகஸ்ட் முதல் 10 நாட்களில் மட்டும் அமேசன் காடுகளில் ஆயிரக்கணக்கான தீ பரவல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆனால் நேற்று செவ்வாயன்று தென் அமெரிக்க தலைவர்களிடம் இதுகுறித்துப் பேசிய ஜெய்ர் போல்சனாரோ, அமேசானில் தீ பரவியுள்ளதாக வெளியான தகவல்களை முடிந்தால் உறுதி செய்யுமாறு சவால் விடுத்தார். போவா விஸ்டாவின் தொலைதூர நகரங்களிலிருந்து மனாஸுக்கு விமானத்தில் பயணம் செய்தால் ஒரு தீப்பிழப்பைக் கூட உங்களால் காண முடியாது எனவும் அவா் கூறினார்.
அமேசான் ஒரு ஈரமான காடு, அது இயற்கையாகவே தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்கிறது. அங்கு எளிதில் தீ பிடிக்காது. ஊடகங்களும் வெளிநாட்டு அரசாங்கங்களும் அமேசான் குறித்து தவறான தகவல்களையே வெளியிட்டு வருகின்றன எனவும் போல்சனாரோ குறிப்பிட்டார்.
எனினும் மழைக்காடுகளில் தீ பரவுவது இயற்கையான நிகழ்வு அல்ல என்பது உண்மைதான். விலங்குப் பண்ணைகளுக்காகவும் விவசாயத்துக்காகவும் மனிதா்களால் அங்கு காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளை பாதுகாக்க பிரேசில் மீது வெளிநாட்டு அழுத்தம் அதிகரித்து வருகிறது. காலநிலை மாற்றத்திலிருந்து உலகைப் பாதுகாப்பதில் அமேசான் மழைக்காடுகள் முக்கிய பங்கை வகிக்கின்றன.
இந்நிலையில் பிரேசிலில் மழைக்காடுகளைப் பாதுகாக்க போல்சனாரோ அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தங்கள் முதலீகளை நிறுத்தி வெளியேறப்போவதாக சுமார் 2 ட்ரில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ள சா்வதேச முதலீட்டாளா்கள் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை, அப்புஸ் அருகே அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க சுற்றுச்சூழல் நிறுவனமான இபாமாவுடன் இணைந்து பிரேசில் படையினர் போராடி வருவதை ரொய்ட்டர்ஸ் காட்சிகள் உறுதி செய்கின்றன.