Friday 26th of April 2024 01:32:44 AM GMT

LANGUAGE - TAMIL
.
ரணிலைப் போன்று பலவீனமானவராக சஜித்தையும் காட்டும் அரசின் சதியை முறியடித்துள்ளோம்!

ரணிலைப் போன்று பலவீனமானவராக சஜித்தையும் காட்டும் அரசின் சதியை முறியடித்துள்ளோம்!


ரணில் விக்கிரமசிங்கவைப் போன்று பலவீனமானவராக சஜித் பிரேமதாசவையும் காட்ட முற்பட்ட அரசின் சதியை முறியடிக்கும் வகையிலேயே தேசியப் பட்டியல் ஆசன விடயத்தில் விடுக்கொடுப்பினை மேற்கொண்டதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

"தேசியப் பட்டியலில் ஓர் ஆசனத்தைப் பெறுவது மட்டும்தான் எங்கள் இறுதி இலக்கு அல்ல. அதைப் பெறாதது எங்கள் பலவீனமும் அல்ல. அது எங்கள் இயலாமையும் அல்ல. இது தொடர்பாக நாம் எடுத்த முடிவு வரலாற்று சிறப்பு மிக்க முடிவாகும். இந்நாட்டில் இன்று ஒப்பீட்டளவில், அனைத்து இனங்களையும் அணைத்து செல்லும் ஒரே சிங்கள தலைவராக இருக்கும் சஜித் பிரமதாஸவை, சிங்கள மக்கள் மத்தியில், இன்னொரு ரணில் விக்கிரமசிங்கவாக, பலவீனமானவராகக் காட்ட முயலும் அரசின் சதி முயற்சிகளுக்கு நாம் ஒருபோதும் துணைபோக முடியாது."

- இவ்வாறு கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"சிறுபான்மை தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவை சுவரில் சாய்த்து, பயமுறுத்தி காரியம் செய்து கொள்கிறார்கள் என்ற அபிப்பிராயத்தை இந்நாட்டில் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்த அரச ஊடகங்கள் மற்றும் அரசு சார்பு தனியார் ஊடகங்கள் பெரும் முயற்சி எடுத்தன. இப்படிச் சொல்லியே ரணில் விக்கிரமசிங்கவை இந்த அரச கட்சி அணி, அரசு சார்பு பெளத்த பிக்குகள் அணி என்பவை அழித்தன. ஆகவே, சஜித் பிரேமதாஸவையும், இன்னொரு ரணில் விக்கிரமசிங்கவாகவும், பலவீனமான தலைவராகவும் சித்தரித்து, ஆரம்பத்திலேயே அழித்துவிட இந்த அரசு மிகப்பெரும் முயற்சி எடுத்தது. இவற்றை நாம் உணர்ந்தோம்.

இந்தத் தொலைநோக்குப் பார்வையினாலேயே, தமிழ் முற்போக்குக் கூட்டணி, தேசியப் பட்டியல் தொடர்பில் நிதானமாக நெகிழ்வுத் தன்மையுடன் முடிவெடுத்தது. நாங்களே உருவாக்கிய ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டணியை நாமே சிதைக்கக் கூடாது என நாம் முடிவு செய்தோம்.

இந்த நாட்டில் இன்று ஒப்பீட்டளவில், அனைத்து இனங்களையும் அனைத்துச் செல்லும் ஒரேயொரு சிங்களத் தலைவராக இருக்கும் சஜித் பிரமதாஸவையும், ரணில் விக்கிரமசிங்கவைப் போன்று, சிங்கள மக்கள் மத்தியில் பலவீனமானவராகக் காட்டும் அரசின் சதி முயற்சிகளுக்கு நாம் துணைபோக முடியாது எனத் தீர்மானித்தோம்.

ஆகவே, இது தொடர்பில் முடிவு எடுக்கும் அதிகாரத்தை அவருக்கு நாம் வழங்கினோம். இந்த நிதானமான பொறுப்பு வாய்ந்த தொலைநோக்குக் கொண்ட எமது நிலைப்பாட்டை எமது வாக்காளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், வர்த்தக சமூகப் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், ஆசிரியர்கள், ஊடகத்துறை தலைமை பிரதானிகள், தமிழ் சமூக ஊடக முன்னோடிகள் உள்ளிட்ட அனைத்து தமிழ் பேசும் மக்களும் இன்று புரிந்துகொண்டுள்ளார்கள் என நான் நம்புகிறேன் தெரிவு செய்யப்பட்டுள்ள

தமது முன்னாள் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தலைமையின் பிடிவாதம் காரணமாக , புதிய ஒரு கட்சியை அமைத்த, சில நாட்களுக்கு உள்ளேயே, தேர்தலைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டதால், மாவட்டங்களில் போட்டியிட்டு வெற்றிபெறக் கூடிய பலரை கொழும்பில் கட்சித் தலைமையகத்தில் தங்கியிருந்து தேர்தல் பணி செய்யுமாறு தாம் பணித்துள்ளதாக, சஜித் பிரேமதாஸ தமிழ், முஸ்லிம் பங்காளிக் கட்சிகளிடமும், ஜாதிக ஹெல உறுமயவிடமும் விளக்கி கூறினார். நாம் எதிர்பார்த்த பத்து தேசியப் பட்டியல் கிடைத்து இருக்குமாயின் இந்தத் தர்ம சங்கடம் ஏற்பட்டு இருக்காது எனவும் கூறியிருந்தார்.

நமது கட்சிக்கு உரிய தேசியப் பட்டியலைத் தேடிப் பெறுவது என்பதில் நாம் மிகவும் அக்கறையுடன் இருந்தோம். ஆகவே, நாம் அமைதியாக இருக்கவில்லை. அது தொடர்பில் எமது குரலை நாம் உரக்க எழுப்பினோம். எனினும், முடிவு எடுக்கும்போது நாம் நிதானமாக முடிவுகளை எடுத்தோம். எமது தேசிய கூட்டணியை உடைத்துக்கொண்டு நாம் சென்றால் அரசு மகிழ்வடையும். அதுதான் அரசின் எதிர்பார்ப்பு.

ஐக்கிய மக்கள் சக்தி என்ற எமது தேசிய கூட்டணி உடையுமானால், அது இரண்டு நாட்களுக்குத் தலைப்புச் செய்திகளாக இருக்கும். பின், இந்த நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு எஞ்சி இருக்கும் ஒரே தேசிய நம்பிக்கையும் இழந்து, நாம் மேலும் பலவீனமடைவோம்.

ஏற்கனவே வடக்கில், கிழக்கில் இந்த அரசு தமிழ் கட்சிகளை மிகவும் பலவீனடையச் செய்துள்ளது. அங்கே ஊடுருவி உள்ளது. இந்நிலையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை இணைத்து நாம் உருவாக்கியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி என்ற இந்தத் தேசியக் கூட்டணியையும் நாம் சிதைக்கவும், பலவீனமடையமும் விட முடியாது. ஆகவேதான் எமது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு உள்ளேயும், தமிழ் சிவில் சமூக பிரதிநிதிகளிடமும் கலந்து பேசி இந்த முடிவுகளை எடுத்தோம்.

தேசியப் பட்டியல் என்பது வேறு. நமது மக்கள் வாழும் மாவட்டங்களில் தமிழ் எம்.பிக்கள் தெரிவு செய்யப்படுவது என்பது வேறு. இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ளக் கூடாது.

இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் வாழ்கின்ற தமிழ் வாக்காளர்கள் இன்னமும் சற்று அதிகமாக சிந்தித்து வாக்களித்திருந்தால், கொழும்பு மாவட்டத்தில் இன்னமும் அதிகமாக வாக்களித்து இருந்தால், இந்த மாவட்டங்களில் தமிழ் எம்.பிக்கள் மேலதிகமாக உருவாக வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால், மக்கள் வாக்களிக்காமல் தவறு செய்து விட்டார்கள்.

இரத்தினபுரியில் மொத்த தமிழ் வாக்காளர் தொகை சுமார் 75 ஆயிரம். ஆனால், எமது வேட்பாளர் சந்திரகுமாருக்கு சுமார் 36 ஆயிரம் பேர்தான் வாக்களித்துள்ளார்கள். இன்னமும் சுமார் 9 ஆயிரம் பேர் அவருக்கு வாக்களித்திருந்தால், சந்திரகுமார் அங்கே தமிழ் எம்.பியாக உருவாகி இருப்பார். கேகாலை மாவட்டத்தில் மொத்த தமிழ் வாக்கு 40 ஆயிரம். எமது வேட்பாளர் பரணீதரன், சுமார் 23 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார். அங்கே இன்னமும் 5 ஆயிரம் வாக்குகளை அவர் பெற்றிருந்தால் அவர் அங்கே தமிழ் எம்.பியாக வெற்றி பெற்றிருப்பார்.

இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா போன்ற மாவட்டங்களில் எமது தொலைபேசி சின்னத்துக்கு எதிரான அணிகளில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் என்ற போலி நபர்களில் ஒருவர்கூட அவ்வந்த மாவட்டங்களில், இருநூறு (200) விருப்பு வாக்குகள் கூட பெறவில்லை. பணம் வாங்கிக்கொண்டு எம்மை அழிக்க வேண்டும் எனக் கெட்ட எண்ணத்தோடு மட்டும் செயற்பட்ட இவர்கள் படுதோல்வி அடைந்துள்ளார்கள். ஆனாலும், தேர்தல் காலங்களில் இவர்கள் செய்த பொய், புரட்டு போலிப் பரப்புரைகள் மக்களைத் தைரியப்படுத்தின. ஆகவே, இவர்கள்தான், இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா மாவட்டங்களில் தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெறாமைக்கு மூலகாரணங்கள் ஆகும்.

அதேவேளையில், தேர்தல் காலங்களில் எமக்காக ஒரு துரும்பும்கூட எடுத்துப் போடாத, எமக்கு ஆதரவாக ஒரு ஊடகங்களில் எழுதாத, சமூக ஊடகங்களில் பதிவு போடாத, தேர்தல் நிதி இல்லாமல் நாம் பட்ட எமது நடைமுறை கஷ்டங்களை உணராத, எமக்கு எந்தவித உதவியும் செய்யாத, அதையும் மீறி சென்று எமக்கு உபத்திரவம் செய்வதற்காக, எமக்கு எதிரான அணி அரசியல்வாதிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு, எமக்கு எதிரான அணியில் சேர்ந்து, போலி வேட்பாளார்களாக போட்டியிட்டு, எமக்கு எதிராகப் பொய்ப் பரப்புரைகளைச் செய்து, கூசாமல் எமது வாக்கை சிதறடித்த, சோரம்போன அரசியல் வியாபாரிகள், இன்று வெட்கமில்லாமல் "தேசியப் பட்டியலைச் சண்டையிட்டு எடுங்கள்" என்றும், அதை எடுத்து, "இவருக்குக் கொடுங்கள்" என்றும், "அவருக்குக் கொடுக்க வேண்டாம்" என்றும் எமக்கு அறிவுரை கூறுகின்றார்கள்; கூக்குரலிடுகின்றார்கள்.

நிறுவன ரீதியான பாரம்பரியமற்ற, சில சுயாதீன ஊடகங்களிலும் இத்தகைய பல போலிகள் ஒளிந்து தேர்தல் கால வியாபாரம் செய்து பணம் தேடியுள்ளார்கள். இத்தகைய சோரம்போன போலி நபர்களுக்கு நாம் எமது வெற்றிகளின் மூலம் மறக்க முடியாத பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளோம். இனியும் இத்தகைய நபர்களிடம் ஏமாற வேண்டாம் என மக்களைக் கேட்டுக்கொள்கின்றேன்" - என்றுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE