வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி. விக்னேஸ்வரன் தனது கன்னி அமர்வில் நேற்று ஆற்றிய உரையில் சில பகுதிகளை அவைக் குறிப்பிலிருந்து (hansard) நீக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார சபாநாயகர இன்று கோரினார்.
விக்னேஸ்வரன் தனது பேச்சில் இலங்கையின் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் சில கருத்துக்களை வெளிப்படுத்தியதாக அவா் குற்றஞ்சாட்டினார்.
பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றபோது இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாப்பேன் என விக்னேஸ்வரன் உறுதிமொழி எடுத்துக் கொண்டார் . ஆனால் நாட்டைப் பிளவுபடுத்துவதை ஊக்குவிக்கும் வகையிலான கருத்துக்களை அவர் தனது பேச்சில் வெளியிட்டார் எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த சபாநாயகர் இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதாகப் பதிலளித்தார்.
விக்னேஸ்வரன் நாடாளுமன்றத்தில் முதல் அமா்வில் சபாநாயகருக்கு வாழ்த்துத் தெரிவித்து நேற்று உரையாற்றினார்.
இந்தப் பேச்சில் தமிழ் உரிமைகளை நிராகரிக்க முடியாது என அவா் தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு எனவும் அவர் கூறினார்.
ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை இருக்கும் என்றும் விக்னேஸ்வரன் தனது பேச்சில் குறிப்பிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.