கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்.
டெல்லி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சற்று முன்னர் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று முற்பகல் பிரணாப் முகர்ஜியின் நுரையீரல் செயற்பாடு மிகவும் மோசமடைந்து உடல் நலன் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக இராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
பிரனாப் முகர்ஜியின் உடல்நிலை மேலும் மேலும் மோசமான நிலையை எட்டி வருவதாக டெல்லி இராணுவ மருத்துவமனை இன்று முற்பகல் அறிவித்திருந்தது. இந்நிலையில் அவா் இறந்துவிட்டதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரணாப் முகர்ஜி2012 முதல் 2017 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தார். அவர் அரசியல்வாதியாக மட்டுமின்றி, பொருளாதார நிபுணராகவும் இருந்தார்.
இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், நிதியமைச்சராகவும் அவர் இருந்துள்ளார்.
இந்திய வங்கிகளின் பல குழுக்களிலும் பிரணாப் முகர்ஜி பங்கு வகித்துள்ளார். உலக வங்கியின் இயக்குநர் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். மக்களவை கட்சிக் குழு தலைவராகவும் பிரணாப் முகர்ஜி பணியாற்றியுள்ளார்.
சாதாரண பின்னணியைக் கொண்ட 84 வயதான பிரணாப் முகர்ஜி, 1935 டிசம்பர் 11 ஆம் தேதி மேற்கு வங்கத்தில் மிராட்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். அவருடைய தந்தை உள்ளூர் காங்கிரஸ் தலைவராகவும், சுதந்திரப் போராட்ட தியாகியாகவும் இருந்தார்.
கல்கத்தா பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டமும், சட்டப் படிப்பில் இளங்கலை பட்டமும் பெற்றுள்ளார்.
பின்னர் கல்லூரி ஆசிரியராகவும், பத்திரிகையாளராகவும் பணியாற்றினார்.
1969இல் 34 வயதை எட்டியபோது பிரணாப் முகர்ஜியின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. அப்போது அவர் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்திரா காந்தியின் வழிகாட்டுதலில் அவருடைய அரசியல் பயணம் இருந்தது. அதன்பிறகு அவருடைய வளர்ச்சி வேகமானதாக இருந்தது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா