"இலங்கையின் உள்நாட்டு நல்லிணக்கச் செயற்பாடுகளில் எமக்குத் துளியளவும் நம்பிக்கையில்லை." - இவ்வாறு இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்துக்குப் பிரதான அனுசரணை வழங்கிய நாடுகள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 45 அமர்வில் குறித்த நாடுகள் இதனைத் தெரிவித்துள்ளன.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் தனது உரையில் இலங்கை குறித்து வெளியிட்ட கரிசனைகளைக் கருத்தில் எடுத்துள்ளோம் எனவும் அந்த நாடுகள் குறிப்பிட்டுள்ளன.
கனடா, ஜேர்மனி, பிரிட்ட ன், வடக்கு மசெடோனியா மற்றும் மொன்டிநீக்ரோ ஆகிய நாடுகளின் சார்பில் உரையாற்றிய பிரிட்டனின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான தூதுவர் ரீட்டா பிரென்ஞ் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"அடுத்த மார்ச் மாத அமர்வில் இலங்கை தொடர்பாக ஐ,நா. மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையை மனித உரிமைகள் சபை ஆராயும்.
அதேவேளை, 2015ஆம் ஆண்டு ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் மனித உரிமைகள் சபை ஆராயும்.
இலங்கை கடந்தகால காயங்களை ஆற்றுவதற்கும் மனித உரிமைகள் ஆணையாளரினால் பதிவு செய்யப்பட்ட பாரிய உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குத் தீர்வைக் காண்பதற்குமான கருத்துடன்பாட்டுடனான கட்டமைப்பை ஐ.நா. தீர்மானம் மூலம் மனித உரிமைகள் சபை உருவாக்கியது.
குறிப்பிட்ட கட்டமைப்பு கருத்துடன்பாட்டுடனும் இலங்கையின் முழுமையான ஆதரவுடனும் மனித உரிமைகள் சபையால் இரண்டு முறை புதுப்பிக்கப்பட்டது.
ஆனால், இலங்கை அரசு அந்தத் தீர்மானத்தைத் தொடர்ந்தும் ஆதரிக்கவில்லை எனத் தெளிவாக மனித உரிமைகள் சபைக்குத் தெரிவித்துள்ளது. இதனால் இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்துக்குப் பிரதான ஆதரவை வழங்கிய நாடுகள் மீண்டும் ஏமாற்றம் அடைந்துள்ளன.
இலங்கையின் புதிய அணுகுமுறை குறித்து இந்த ஐ.நா. மனித உரிமைகள் சபை கவனம் செலுத்த விரும்புகின்றது.
இலங்கையில் காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் மற்றும் இழப்பீட்டுகளுக்கான அலுவலகம் உட்பட சுயாதீன ஆணைக்குழுக்களின் எதிர்காலம் முக்கியமானது" - என்றார்.