கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு சாத்தியமான தடுப்பூசி கட்டறியப்பட்டாலும் கூட 2024ஆம் ஆண்டுவரை அது போதுமான வகையில் கிடைக்காது என தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்தியாவின் புனேவைச் சேர்ந்த சீரம் மருந்தாக்க நிறுவனத் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராசெனிகா நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிக்கும் ஒப்பந்தத்தை சீரம் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி போட்டுக் கொண்ட தன்னார்வலர்களில் ஒருவருக்கு அசாதாரணமான உடல் பக்க விளைவு தென்பட்டதால் அந்தப் பரிசோதனை இடைநிறுத்தப்பட்டு மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தடுப்பூசி ஒன்று கண்டறியப்பட்டால் கூட உலகம் முழுவதும் தேவையான அளவுக்கு விரைவாக அதனை உற்பத்தி செய்யும் திறனை மருந்தக நிறுவனங்கள் கொண்டிருக்கவில்லை என்று பூனாவாலா தெரிவித்துள்ளார்.
சாத்தியமான தடுப்பூசி ஒன்று சந்தைக்கு வந்தாலும் கூட அது அனைவருக்கும் கிடைக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஆகலாம். கொரோனா வைரஸ் தடுப்பூசி என்பது இரண்டு முறை போடக்கூடியதாக இருக்கும். தட்டம்மை, ரோட்டா வைரஸ் (Rotavirus) போல இரண்டு முறை போடக்கூடிய அந்த மருந்து தேவையென்றால், உலக அளவில் 15 பில்லியன் அளவுக்கும் மருந்து தேவை எனவும் பூனாவாலா கூறியுள்ளார்.
உலக அளவில் அஸ்ட்ராசெனிகா, நோவாவாக்ஸ் ஆகிய சர்வதேச மருந்தக தயாரிப்பாளர்களுடன் இணைந்து கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை தயாரிக்க இந்தியாவின் சீரம் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
அதன்படி, 100 கோடி அளவிலான மருந்துகள் இந்நிறுவனத்தால் தயாரிக்கப்படும். அதில் பாதி அளவு இந்தியாவின் தேவைக்காக வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேவைப்பட்டால் ரஷ்யாவின் கமாலேயா ஆய்வகத்துடன் சேர்ந்து அந்நாடு தயாரித்துள்ளதாக கூறும் ஸ்பூட்னிக் தடுப்பு மருந்து தயாரிப்பிலும் இணைந்து செயல்படுவோம் என்று சீரம் நிறுவனம் கூறியுள்ளது.