"ஐக்கிய மக்கள் சக்தியினர் ஐக்கிய தேசியக் கட்சியின் மீது கொண்டுள்ள அதிக நேசத்தால் அவர்களுடன் இணைந்து செயற்பட நான் தயாராக இருக்கின்றேன்."
- இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
ஐ.தே.கவின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் நேற்று நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் பிரதித் தலைவராக ருவான் விஜேவர்தன நேற்று முன்தினம் தெரிவுசெய்யப்பட்டார். இந்தநிலையில், நேற்று கங்காராம விகாரையில் ஆசிர்வாதம் பெற்றதை அடுத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"டிசம்பர் மாதமாகும்போது ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவின் நம்பிக்கையை வென்றால் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க நான் தயாராக இருக்கின்றேன்.
நான் கட்சிக்காகச் செய்ய வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. நாட்டு மக்களின் நம்பிக்கையை மீண்டும் வெல்வேன். கட்சியின் அனைத்துத் தலைவர்களையும் ஒன்றிணைத்து எதிர்கால பயணத்தை ஆரம்பிக்கவுள்ளேன்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சிலருடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. அவர்களும் கட்சியின் மீது கொண்டுள்ள அதிக நேசத்தால் அவர்களுடன் இணைந்து செயற்பட நான் தயாராக இருக்கின்றேன். அதாவது கட்சியை முழுமையாகப் புனரமைக்க ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளேன்" - என்றார்.