விசம் தடவிய கடிதத்தை கனடாவில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி மாளிகையான வெள்ளை மாளிகைக்கு அனுப்பியவரெனச் சந்தேகிக்கப்படும் கனேடியப் பெண் அமெரிக்கா – கனடா எல்லையில் உள்ள ஒன்ராறியோ – போர்ட் எரி நகரில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
போர்ட் எரி பகுதியில் வைத்து இப்பெண் நேற்று அமெரிக்க சுங்க அதிகாரிகள் மற்றும் கனடா எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தகவலை சட்ட அமுலாக்கப் பிரிவு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
விசம் தடவப்பட்ட இந்தக் கடிதம் வெள்ளை மாளிகையை அடைவதற்கு முன்னர் இந்த வார தொடக்கத்தில் தடுக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரான பெண்ணின் பெயர் உடனடியாக வெளியிடப்படவில்லை. அவா் விசாரணைகளின் பின்னர் கனடா கூட்டாட்சி நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்க ஜனாதிபதிக்கு முகவரியிடப்பட்டு கனடாவில் இருந்து அனுப்பப்பட்ட இந்தக் கடிதத்தில் ரைசின் (Ricin) எனப்படும் நஞ்சு தடவப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இது குறித்தவிசாரணைகளை அமெரிக்க புலனாய்வுத் துறையான எப்.பி.ஐ. உடன் இணைந்து கனடா ஆர்.சி.எம்.பி. பொலிஸார் முன்னெடுத்துவந்தனர்.
வெள்ளை மாளிகைக்குஅனுப்பப்பட்ட சந்தேகத்துக்கிடமான கடிதம் தொடர்பான விசாரணையை முன்னெடுக்க எப்.பி.ஐ.உதவி கோரப்பட்டதை ஆர்.சி.எம்.பி. செய்தித் தொடர்பாளர் டான் பிரையன் நேற்று முன்தினம் உறுதிப்படுத்தனார்.
முதற்கட்ட விசாரணையில் ஆமணக்கம் விதையில் இருந்து பெறப்படும் ரைசின் என்ற (Ricin) ஒரு வகை நச்சுப்பொருள் கடிதத்தில் அடங்கியுள்ளது தெரியவந்தது. ரைசினை சுவாசத்தோடுஉள்ளிழுப்பதன் மூலம், ஊசியினால் செலுத்துவதன் மூலம், அல்லது வாய் வழியாக உட்கொள்வதன்மூலம் அது புரதத் தொகுப்பைப் பாதிக்கச் செய்து பயங்கர விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.