கனடாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் தற்போதைய போக்குத் தொடர்ந்தால் ஒக்டோபர் மாத இறுதிக்குள் நாளொன்றுக்கு 5,000 என்ற அளவுக்குத் தொற்று நோயாளர் எண்ணிக்கை உயரும் என கனடாவின் பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
கனடாவில் இப்போது நாளொன்றுக்கு சராசரியாக 1,000 தொற்று நோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர். ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களிலேயே தொற்று நோயாளர் தொகை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கட்டுப்பாடுகளின்றி இந்தப் போக்குத் தொடர்ந்தால் ஒக்டோபர் மாத இறுதிக்குள் இந்தத் தொகை 5 மடங்குகளாக அதிகரிக்கும்.
இது வசந்த காலத்தில் ஏற்பட்ட தொற்று நோயின் முதல் அலையின்போது பதிவான தொற்று நோயாளர் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் தற்போது ஒரு மோசமான பாதையில் இருக்கிறோம் என்பதே இப்போது சொல்லக்கூடியது என கனடா தலைமை பொது சுகாதார அதிகாரி தெரேசா டாம் கூறினார்.
கனேடியர்கள் சுகாதார-பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி பெரியளவில் ஒன்றுகூடாமல், சமூக இடைவெளியைப் பின்பற்றி நடந்துகொண்டால் தொற்று நோயைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் அவா் குறிப்பிட்டார்.
கனடாவில் தற்போது கொரோனா மரணங்களில் எண்ணிக்கை மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை முதல் அலையுடன் ஒப்பிடும்போது குறைவாகவே இருந்தாலும், நாங்கள் மெதுவாக ஆபத்தை நோக்கி நகரும் போக்கே தென்படுகிறது எனவும் டாக்டர் தெரேசா டாம் எச்சரித்தார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா