"ஜனநாயகத்துக்கும், நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசால் முன்வைக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவைத் தோல்வியடையச் செய்வதே எமது பிரதான நோக்கம்."
- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் 'வெல்வோம்' தேர்தல் பிரசார நிலையங்களை ஸ்தாபிக்கும் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை அநுராதபுரம் மாவட்டத்தை முதன்மைப்படுத்தி இடம்பெற்றது. இதன்போது அநுராதபுரம் - கெக்கிராவ பகுதியில் விகாரை ஒன்றுக்குச் சென்று வழிபட்ட சஜித் பிரேமதாஸ பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறியதாவது:-
"அரசால் முன்வைக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டால் நாடு பல பாதிப்புகளை எதிர்நோக்கவேண்டி ஏற்படும். அதனூடாக ஜனநாயகக் கொள்கைகளுக்கும் சிக்கல்கள் ஏற்படும் ஆபத்து இருக்கின்றது. இந்தநிலையில், 20 ஆவது திருத்தச் சட்டவரைவைத் தோல்வியடையச் செய்வதே எமது பிரதான நோக்கம்.
நாங்கள் 20ஆவது திருத்தச் சட்ட வரைவில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் நாடாளுமன்றத்திலும் கருத்துத் தெரிவித்திருந்ததுடன், அதற்கு வெளியிலும் அது தொடர்பில் பேசியிருந்தோம். இந்தநிலையில், இந்தத் திருத்தத்தைத் தோல்வியடையச் செய்வதற்காகத் தொடர்ந்தும் எமது செயற்பாடுகளை முன்னெடுக்கவும் எதிர்ப்பார்த்திருக்கின்றோம்" - என்றார்.