கொரோனாவின் தீவிரம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதாகக் கூறி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் பதிவொன்றை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ட்ரம்ப் வெள்ளை மாளிகை திரும்பிய நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவொன்றை இட்டிருந்தார்.
தடுப்பூசி இருந்தபோதிலும் கூட பருவ கால காய்ச்சிலில் சில நேரங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் அமெரிக்காவில் இறக்கின்றனர். அதற்காக நாட்டை முடக்க முடியுமா? அதனுடன் வாழ நாம் கற்றுக்கொண்டோம் என அந்தப் பதிவில் அவா் தெரிவித்திருந்தார்.
அவரது இந்தப் பதிவு கொரோனாவின் தீவிரத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகவும், ஏனையோரை தவறாக வழிநடத்தும் வகையிலும் அமைந்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் விசனம் வெளியிட்டனர்.
இதனையடுத்து பேஸ்புக் நிறுவன விதிகளை மீறியதாகவும், கொரோனாவின் தீவிரம் குறித்த தவறான தகவல்களை வெளியிட்டதாகவும் கூறி அவரது பதிவு நீக்கப்பட்டது.
இதே கருத்தை டருவிட்டரிலும் டிரம்ப் பதிவிட்டிருந்தார். ஆனாலும் அவரது கருத்துக்கள் நீக்கப்படாமல் ‘‘செய்தியுடன் தவறான கருத்து வெளியிடப்பட்டுள்ளது‘‘ என மட்டும் டுவிட்டர் நிறுவனம் எச்சரித்துள்ளது.
சிறுவா்கள் இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள். எனவே, பாடசாலைகளைத் திறப்பதால் அவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகமாட்டார்கள் என கடந்த ஆகஸ்ட் மாதம் ட்ரம்ப் வெளியிட்ட கருத்து ஒன்றையும் பேஸ்புக் நீக்கியது.
டிரம்பின் கருத்து குறித்து மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்பால் ஆதாரமில்லாத செய்தியைப் பகிர்ந்ததாக அவரின் பதிவு நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.