ஐ.நா.உலக உணவுத் திட்டம் அமைப்புக்கு 2020-ஆம் ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
போர்களுக்கு நடுவே உலகெங்கும் மக்கள் பசியை போக்க ஐ.நா.உலக உணவுத் திட்டம் எடுத்த முயற்சிகள் உந்துதலாக இருந்ததாக நோர்வே நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.
இதற்கான பரிசுத்தொகை 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இதேவேளை, இது மிகவும் "பெருமைமிக்க தருணம்" என்று ஐ.நாவின் உலக உணவு திட்டத்துக்கான செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
88 நாடுகளில் ஆண்டுக்கு 97 மில்லியன் மக்களுக்கு உலக உணவுத்திட்ட அலுவலகம் உதவி வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
"இந்த பரிசு இந்த அமைப்புக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து, பசியால் உலகில் எவ்வளவு பேர் தவிக்கிறார்கள் என்பதை பலரும் உணர வேண்டும் என்று விரும்புகிறோம்" என்று நோர்வேஜியன் நோபல் பரிசுக் குழுவின் தலைவர் பெரிட் ரெஸ்- ஆண்டர்சன் கூறினார்.
இந்த ஆண்டு சமாதானத்துக்காக நோபல் பரிசுக்காக சுமார் 107 அமைப்புகளும், 211 தனி நபர்களும் பரிந்துரைக்கப்பட்டனர்.
அதில், உலக சுகாதார அமைப்பு மற்றும் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கிரெட்டா டூன்பெர்க் பெயர்கள் இடம்பிடித்திருந்தன.
கடந்த 5ஆம் திகதி மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு, 6ஆம் திகதி இயற்பியலுக்கான நோபல் பரிசு, 7ஆம் திகதி வேதியியலுக்கான நோபல் பரிசு, 8ஆம் திகதி இலக்கியத்துக்கான நோபல் பரிசு என்பன அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று சமாதானத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கும் அமைப்புகளுக்கும் வழக்கமான நடைமுறைப்படி டிசம்பர் 10ஆம் திகதி நடைபெறும் நிகழ்ச்சியில் நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது.