இந்தியாவின் 130 கோடி மக்களில் குறைந்தது 65 கோடி போ் வரையில் 2021 பெப்ரவரி மாதத்துக்குள் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள் என மாதிரிக் கணிப்பீடு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 30 வீதம் போ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களாக உள்ளனர். இது பெப்ரவரியில் 50 வீதமாக அதிகரிக்கும் என கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவன பேராசிரியர் மனிந்திர அகர்வால் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்று நோய் அதிகளவானோருக்குப் பரவியுள்ளமையால் இயல்பான எதிர்ப்பு சக்தி உருவாகி எதிர்காலத்தில் இந்தியாவில் தொற்று பரவல் வீதம் குறையலாம் எனவும் அவா் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மத்திய சுகாதாரத் துறையின் உத்தியோகபூா்வ தரவுகளின் பிரகாரம் இந்தியாவில் இதுவரை 7.55 மில்லியன் பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்காவை அடுத்து இந்தியா இரண்டாவது நிலையில் உள்ளது.
ஆனால் செப்டம்பர் நடுப்பகுதியில் தொற்று நோய் உச்சத்தை அடைந்த பின்னர் தொற்று வீதம் குறைந்து வருகிறது.
தற்போது தினசரி சராசரியாக 61,390 புதிய தொற்று நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றனர்.
ஆனால் எங்கள் கணித சூத்திர மாதிரிக் கணிப்பீட்டின்படி இதுவரை 30% இந்தியர்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பெப்ரவரி மாதத்திற்குள் 50% வரை உயரக்கூடும் என கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவன பேராசிரியர் மனிந்திர அகர்வால் கூறியுள்ளார்.
இந்தக் கணிப்பீடு மத்திய அரசின் உத்தியோகபூா்வ கணிப்பிடல்களை விட மிக அதிகமாக உள்ளது. செப்ரெம்பா் வரை இந்திய மக்கள் தொகையில் சுமார் 14 வீதம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய அரசின் கணிப்பீடு கூறுகிறது.
ஆனால் மத்திய அரசின் கணிப்பீட்டு முறையின் பிரகாரம் முற்றிலும் சரியான மாதிரியை பெற முடியாது என பேராசிரியர் மனிந்திர அகர்வால் தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஒரு புதிய மாதிரியை உருவாக்கியுள்ளோம். இது பதிவு செய்யப்படாத தொற்று நோயாளர்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறது எனவும் அவா் கூறினார்.
கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவா்களை பதிவு செய்யப்பட்டவா்கள் மற்றும் பதிவு செய்யப்படாதவர்கள் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம் என்று அகர்வால் கூறினார்.
இதேவேளை, இந்தியாவில் விடுமுறை காலம் நெருங்கி வருவதால் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் தொகை அதிகரிக்கக் கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
துர்க்கா பூஜை மற்றும் தீபாவளி உள்ளிட்ட இந்துப் பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா