தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான பேச்சு தாமதமாகலாம் என்று தெரியவருகின்றது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், "நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் எமது கட்சியுடன் பேசுவதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆர்வம் காட்டியிருந்தார். எனினும், தற்போதைய சூழ்நிலையில் இந்தப் பேச்சு இப்போதைக்கு நடைபெறுமா என்பது தெரியவில்லை.
இந்தியப் பிரதமர் மோடியே கூட்டமைப்பினரை பேச்சுக்கு அணுகினார். ஆதலால் இந்தியத் தரப்பினரே சந்திப்புக்கான காலத்தை ஒழுங்குசெய்வார்கள் என்று எதிர்பார்த்துள்ளோம்.
இந்தப் பேச்சு இணைய தொடர்பாடல் மூலம் நடைபெறும் என்றே நம்புகின்றோம்" - என்றார்.
இலங்கையில் மாகாண சபை நிர்வாக முறை உருவாகக் காரணமாக இருந்த இந்தியா, தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழர் தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.