புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் தொடர்ந்த நிலையில் அடுத்த சுற்றை உறுதி செய்யும் முனைப்பில் களமிறங்கிய டெல்லி அணிக்கு அதிர்ச்சியளித்து வெற்றி வாகை சூடியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி.
ஐபிஎல் தொடரின் 47-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
நாணயச் சுழற்சியில் வென்ற டெல்லி அணித் தலைவர் ஷ்ரேயாஸ் அய்யர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 219 ஓட்டங்களை குவித்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சார்பில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய டேவிட் வோர்ணர் மற்றும் விருத்திமான் சாஹா இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ஆட்டத்தை தம்வசப்படுத்தியிருந்தனர்.
அதிரடியாக விளையாடிய டேவிட் வோர்ணர் 34 பந்துகளை எதிர்கொண்டு எட்டு 4 ஓட்டங்கள், இரண்டு 6 ஓட்டங்கள் அடங்கலாக 66 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாக சாஹா 45 பந்துகளை எதிர்கொண்டு பன்னிரண்டு 4 ஓட்டங்கள் இரண்டு 6 ஓட்டங்களுடன் 87 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
இறுதியில் மணீஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 31 பந்தில் 44 ஓட்டங்களை எடுக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 219 ஓட்டங்களை பெற்றிருந்தது.
220 என்ற இமாலைய இலக்கு நோக்கி துடுப்பெடுத்தாடிய டெல்லி அணிக்கு ஆப்கானிஸ்தான் நட்சத்திர பந்துவீச்சாளர் ரஷீட் கான் பெரும் சவாலாக மாறியிருந்தார்.
4 ஓவர்கள் பந்து வீசிய ரஷீட் கான் வெறும் 7 ஓட்டங்களை மட்டும் விட்டுக் கொடுத்து முக்கிய 3 விக்கெட்டுக்களை வீழ்த்தி டெல்லிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தார்.
இறுதியில் டெல்லி அணி 19 ஒவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 131 ஓட்டங்களை மட்டும் பெற்று 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
போட்டியின் ஆட்ட நாயகனாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சாஹா தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, உலகம்