கோவிட்-19 தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரு மாதத்துக்கு முழு நாட்டையும் முற்றாக முடக்குவது குறித்து பிரெஞ்சு அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பிரான்சின் BFM தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
முழுமையான சமூக முடக்கல் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரக்கூடும் எனக் கருதப்படுகிறது. எனினும் அது குறித்து உத்தியோகபூா்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.
முழுமையாக சமூக முடக்கலை பிரான்ஸ் அறிவித்தாலும் இந்த ஆண்டு மார்ச் மாதம் விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் போன்று அது இருக்காது. இம்முறை அறிவிக்கப்படும் சமூக முடக்கல் மிகவும் நெகிழ்வானதாக இருக்கும் எனவும் BFM தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன்று புதன்கிழமை மாலை நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றவுள்ளார். இதன்போது தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கான அரசின் திட்டங்களை அவர் அறிவிக்கவுள்ளதாக மக்ரோன் அலுவலகம் அறிவித்தது.
இதேவேளை, நாங்கள் கடினமான முடிவுகளை எதிர்பார்க்க வேண்டும் என பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மனின் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை பிரான்ஸ் இன்டர் வானொலிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
மற்றொரு சமூக முடக்கலுக்கான சாத்தியங்கள் உள்ளதா? எனக் கேட்டபோது, அதற்கான சாத்தியங்களும் பரிசீலனையில் உள்ளதாக அவா் கூறினார்.
பிரான்சில் நேற்று 523 கொரோனா மரணங்கள் பதிவாயின. கடந்த ஏப்ரல் மாதத்தின் பின்னர் பதிவான மிக அதிகளவு ஒருநாள் மரணங்கள் இதுவாகும். புதிய மரணங்களுடன் நாட்டில் கொரோனா பலியெடுத்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,541 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் நாட்டில் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 12 இலட்சத்தை நெருங்கியுள்ளது.
பல ஐரோப்பிய நாடுகளில் இப்போது கொரோனா வைரஸ் தொற்று நோய் தீவிரமாகியுள்ளது. எனினும் சரியாகக் கையாண்டால் இதனைக் கட்டுப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் கடந்த வாரம் பதிவான தொற்று நோயாளர்களில் 46 வீதமானோர் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என உலக சுகாதார அமைப்பின் அவசரகாலத் திட்ட பணிப்பாளர் டாக்டர் மைக்கேல் ரியான் தெரிவித்தார்.
அத்துடன் உலகளவில் பதிவான மரணங்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி கடந்த வாரத்தில் ஐரோப்பிய நாடுகளில் பதிவானதாகவும் அவா் கூறினார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), பிரான்சு