பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்சவினால் 2021ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு (வரவு - செலவுத்திட்ட உரை) முன்வைக்கப்படவிருப்பதால் நாடாளுமன்றம் நாளை செவ்வாய்க்கிழமை (17) பிற்பகல் 1.40 மணிக்கு கூடவுள்ளது என நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க அறிவித்துள்ளார்.
இதன் பின்னர் மஹிந்த ராஜபக்சவினால் வரவு - செலவுத்திட்டம் முன்வைக்கப்படும். இது இந்த நாட்டின் 75ஆவது வரவு - செலவுத்திட்ட அறிக்கையாக அமையும்.
நாளை பிரதமரினால் வரவு - செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர் நாளைமறுதினம் 18ஆம் திகதி முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை வரவு - செலவுத் திட்டம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடைபெறும்.
இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 21ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடத்தப்படும். நாளைமறுதினம் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நாடாளுமன்றம் முற்பகல் 9.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை நடத்தப்படும்.
இதன் பின்னர் வரவு - செலவுத் திட்ட குழுநிலை விவாதம் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதிவரை நடத்தப்படும். டிசம்பர் 10ஆம் திகதி மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும்.
வரவு - செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் நாளை முதல் வரவு - செலவுத்திட்ட விவாதம் நடத்தப்படும் முழுமையான காலப்பகுதியில் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகச் செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.
நாளை வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் நிதி அமைச்சின் அனுமதியளிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு மாத்திரம் நாடாளுமன்ற அமர்வுகளைப் பார்வையிட அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதுடன், வரவு - செலவுத்திட்டம் முன்வைக்கப்படும் காலப்பகுதியில் சபாநாயகரின் கலரியில் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய ஆசன ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும். பொதுமக்கள் கலரி மற்றும் ஊடகவியலாளர் கலரி என்பன தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்.
வரவு - செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர் நிதி அமைச்சரினால் சம்பிரதாயபூர்வமாக ஏற்பாடு செய்யப்படும் தேனீர் விருந்துபசாரம் இவ்வருடம் இடம்பெறவிருக்கின்றபோதும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் விசேட விருந்தினர்களுக்காக மாத்திரம் இது மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.
கொரோனா வைரஸ் சவால் காரணமாக வரவு - செலவுத்திட்ட விவாதம் நடத்தப்படும் காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது விருந்தினர்களை நாடாளுமன்றத்துக்கு அழைத்துவர முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: மகிந்த ராசபக்ச, இலங்கை