சாத்தியமான கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒன்று பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் அதனை நாடு முழுவதும் துரிதமாக விநியோகிக்கும் நடவடிக்கையில் பங்கேற்க கனடிய இராணுவத்தினர் தயாராகி வருகின்றனர்.
கொரோனா தொற்று நோய்க்கு எதிரான சாத்தியமான தடுப்பூசி ஒன்று விரைவில் பயன்பாட்டுக்கு வரலாம் என்பது குறித்து சாதகமான செய்திகள் வெளியாகிவரும் நிலையில் அதன் விநியோகத்துக்கு கனடிய இராணுவத்தினர் உதவத் தயாராக உள்ளதாக கனடிய பொதுமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற தேசிய பாதுகாப்புக் குழு கூட்டத்தின்போது கனடிய ஆயுதப் படைகளின் கூட்டுப் பணியாளர் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ட்ரெவர் கடியூ தெரிவித்தார்.
கனடாவின் பொது சுகாதாரத் துறையுடன் இணைந்து இத்திட்டத்தில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட இராணுவக் குழுக்கள் ஈடுபடும். இதன்மூலம் மில்லியன் கணக்கான கனடியர்கள் விரைவாகத் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர் கூறினார்.
கொரோனா கட்டுப்பாட்டுப் பணிக்குழுவுடன் இணைந்து நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். குறிப்பாக தடுப்பூசியை விநியோகிப்பதற்கான ஆளணி மற்றும் ஏனைய வளங்களைப் பகிர கனடிய இராணுவம் தயாராக இருப்பதாக மேஜர் ஜெனரல் கடியூ பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கூறினார்.
தடுப்பூசி விநியோகத்தை மேற்பார்வையிடும் ஒரு தேசிய செயல்பாட்டு மையத்தை நிறுவவும் நாங்கள் உதவ முடியும். இது நாடு முழுவதும் கோவிட்19 தடுப்பூசி விநியோகத்தை ஒருங்கிணைக்கும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையமாக இருக்கும் எனவும் அவா் குறிப்பிட்டார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா