அமெரிக்க ஜனாதிபதித் தோ்தலில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாகவும் தானே உண்மையில் வெற்றி பெற்றதாகவும் ஆதாரம் இன்றி தொடர்ந்து குற்றஞ்சாட்டிவரும் டொனால்ட் ட்ரம்ப், தனது கருத்துடன் முரண்பட்ட மூத்த தேர்தல் அதிகாரி ஒருவரை பதவி நீக்கியுள்ளார்.
இணையப் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு முகமை (Cyber Security and Infrastructure Security - Cisa) தலைவரான கிறிஸ் க்ரெப்ஸ் வாக்காளர் நம்பிக்கை குறித்து தெரிவித்த தகவல்கள் மிகவும் துல்லியமற்றதாக இருந்ததால் அவரைப் பதவி நீக்கியுள்ளதான ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் பாதுகாப்பாக நடந்த தேர்தல் என தோ்தல் அதிகாரிகள் பலர் குறிப்பிடுகின்றனர். எனவே, தேர்தலில் மோசடி இடம்பெற்றது என்ற ட்ரம்பின் குற்றச்சாட்டை அவர்கள் மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தமது தோல்வியை ஒப்புக்கொள்ள தொடர்ந்து மறுத்துவரும் டிரம்ப், பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பரை பதவி நீக்கினார்.
இப்போது மூத்த தேர்தல் அதிகாரி ஒருவரையும் அவா் பதவி நீக்கியுள்ளார்.
கடந்த அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து உருவாக்கப்பட்ட இணையப் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு முகமைக்கு க்ரெப்ஸ் தலைவராக இருந்து வருகிறார்.
பல மாநிலங்களில் வாக்கு இயந்திரங்கள் வாக்குகளை பைடனுக்கு சாதகமாக மாற்றிப் பதிவு செய்ததாக ட்ரம்ப் கூறும் குற்றச்சாட்டை மறுத்து, நேரடியாக ட்ரம்புடன் முரண்படும் வகையில் அவர் தனது ருவிட்டரில் கருத்து வெளியிட்டார். இந்தக் கருத்து வெளியான சில மணி நேரங்களில் க்ரெப்சின் பதவி பறிக்கப்பட்டது.
இதேவேளை, ஜனவரியில் பதவியில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு மேலும் சில மூத்த அதிகாரிகளை ட்ரம்ப் பதவி நீக்கம் செய்யலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.