மகர சிறைச்சாலையில் வன்முறைக்கு காரணமானதாகக் கூறப்படும் மாத்திரை வகைகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
வன்முறைக்கு முன்னர் கைதிகள் பல்வேறு வகையான மாத்திரைகளைப் பயன்படுத்தியுள்ளனர் எனத் தகவல் கிடைத்துள்ளது எனவும் அவர் கூறினார்.
அந்த மாத்திரைகள் தொடர்பில், மருந்தியல் வல்லுநர்களிடம் கருத்தைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், மகர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் குறித்த விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த மோதல் குறித்து நேற்று மற்றும் நேற்றுமுன்தினம் சுமார் 56 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது எனவும் அவர் மேலும் கூறினார்.
சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருந்த நிலையில், மற்றுமொரு தரப்பினர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சித்தபோது, கடந்த 29 ஆம் திகதி மாலை மகர சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
இந்தச் சம்பவத்தில் 11 கைதிகள் உயிரிழந்ததுடன், 115 கைதிகளும் 2 சிறைச்சாலை அதிகாரிகளும் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சிறைச்சாலைகள் சீர்திருத்தங்கள் மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நேற்றுமுன்தினம் மஹர சிறைச்சாலைக்கு சென்று அங்கு ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டதுடன், சம்பவம் தொடர்பாக கைதிகளிடம் தகவல்களைக் கேட்டறிந்துள்ளார்.