மனித உரிமை விவகாரங்களைக் காரணம் காட்டி எகிப்துக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய எதிர்காலத்தில் நிபந்தனைகளை விதிக்கப்போவதில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
நிபந்தனைகளை விதிப்பதன் மூலம் பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் கெய்ரோவின் திறனை பலவீனப்படுத்த விரும்பவில்லை எனவும் மக்ரோன் கூறினார்.
மனித உரிமைகள் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் உள்ளபோதும் இதனால் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான விடயங்களின் நிபந்தனைகளை பிரான்ஸ் விதிக்காது எனவும் மக்ரோன் குறிப்பிட்டார்.
எதிப்து ஜனாதிபதி அப்தெல் பத்தா அல்-சிசியுடன் நேற்று
எலிசி அரண்மனையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இரு நாடுகளின் தலைவர்களும் இணைந்து கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோதே மக்ரோன் இவ்வாறு கூறினார்.
புறக்கணிப்பைக் காட்டிலும் பேச்சுக்கள் மூலம் இரு தரப்பு முரண்பாடுகளுக்குத் தீர்வு காண முயல்வது பயனுள்ளதாக இருக்கும். புறக்கணிப்பதன் மூலம் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் எங்கள் கூட்டாளர்களில் ஒருவரின் செயல்திறனை குறைமதிப்புக்குட்படுத்த நாங்கள் விரும்பவில்லை எனவும் மக்ரோன் குறிப்பிட்டார்.
பிரான்ஸ் வந்துள்ள எகிப்து ஜனாதிபதி சிசியை பாரிஸ் வழியாக குதிரைப்படை அணிவகுப்புடன் நேற்று பிரான்ஸ் வரவேற்றது.
சினாய் தீபகற்பம் மற்றும் லிபியா பகுதிகள் ஊடாக தொடர்ந்து அச்சுறுத்தாலாக இருக்கும் ஐ.எஸ். தீவிரவாதக் கும்பல்களுக்கு எதிரான ஒரு அரணாக எகிப்தையும் அதன் தலைவரையும் பிரான்ஸ் கருதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), பிரான்சு