மர்மமான முறையில் உயிரிழந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் மரணம் தொடர்பிலான வழக்கு விசாரணைக்காக பொலீசாரால் சமர்பிக்கப்பட்ட சி.சி.டி.வி கேமராவின் பதிவு குறித்து சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் சந்தேகம் எழுப்பிய நிலையில் மேலதிக பதிவினைப் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் பீட்டர் போல் கோப்பாய் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
கடந்த 11 ஆம் மாதம் 17 ஆம் தேதி கோண்டாவில், வன்னியசிங்கம் வீதியில் உள்ள விடுதி ஒன்றில் வசித்து வந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மூன்றாம் வருட மாணவனான சிதம்பரநாதன் இளங்குன்றன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்ட நிலையிலும், இம் மரணத்தில் சந்தேகம் இருப்பதனால் இவ் விடயத்தை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் பாரப்படுத்தி இதை விசாரணை செய்யுமாறு அவருடைய சகோதரன் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர், இராணுவத்தளபதி, ஆகியோருக்கு கடிதம் அனுப்பி வைத்திருந்தார்.
இந் நிலையில் கடந்த 26. 11. 2020 அன்று யாழ் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது மரணமடைந்த பல்கலைக்கழக மாணவன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை பார்வையிடுவதற்கும், அவர் பயன்படுத்திய தொலைபேசியை பரிசீலனை செய்வதற்கும் மன்று அனுமதிகாக வேண்டும் என கோரிக்கையின் முன் வைத்தார்.இதை ஆராய்ந்த நீதவான் நீதிமன்றம் அப்பகுதியில் உள்ள சி.சி.ரீ.வி. கமராவின் பதிவுகளையும், அவர் பயன்படுத்திய தொலைபேசி பதிவுகளையும் பெற்று நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.
இவ்வழக்கு நேற்று முன்தினம் வியாழக்கிழமை(17) மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போது கோப்பாய் பொலிஸாரினால் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படும் சி.சி.டி.வி கேமராவின் காட்சிகள் நீதிமன்றத்துக்கு சமர்பிக்கப்பட்டது.
இதன்போது இப்பதிவு சடலம் மீட்கப்பட்ட 11 ஆம் மாதம் 17ஆம் திகதி நண்பகல் பெறப்பட்ட பதிவு என மரணமடைந்த யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.