எதிர்வரும் ஜெனீவாக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக புதிய தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படும் என்றும் அதன் உள்ளடக்கம் மற்றும் அதற்கான ஆதரவுத் தளம் என்பன தொடர்பில் ஜனவரி மாதம் தீர்மானிக்கப்படும் என்று இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார்.
பிரித்தானிய மற்றும் ஐ.நா வதிவிடப் பிரதிநிதிகளுடனான சந்திப்புத் தொடர்பில் அருவி இணையத்துக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே எம்.ஏ.சுமந்திரன் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவித்த அவர்,
இன்று காலை இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவரை அவருடைய வாஸஸ்தலத்தில் சந்தித்துக் கலந்துரையாடினேன். இரண்டு மணி நேரம் குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன் போது ஜெனீவாக் கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டுவரவுள்ளமை தொடர்பில் பிரத்தானியா உறுதியான நிலைப்பாட்டில் உள்ளதாகவும் எதிர்வரும் ஜனவரி மாதமே தீர்மானத்தின் உள்ளடக்கம் மற்றும் ஆதரவுத் தளம் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் போது கொண்டுவரவுள்ள தீர்மானம் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலும் இலங்கை அரசாங்கம் குறித்த தீர்மானத்திலிருந்து விலகிக்கொள்ளமுடியாத வகையிலும் அமையவேண்டும் என்றும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலேயே குறித்த வரைபு அமையவேண்டும் என்று எதிர்பார்ப்பதாக வலியுறுத்தினேன் என்று தெரிவித்தார்.
அதேவேளை, குறித்த சந்திப்பின் பின்னர் பௌத்த லோகா மாவத்தையில் உள்ள ஐக்கியநாடுகள் உயர்ஸ்தானிகரகத்துக்குச் சென்று ஐ.நா.வதிவிடப் பிரதிநிதியைச் சந்தித்து ஒரு மணி நேரம் கலந்துரையாடினேன். அங்கும் ஜெனீவாத் தீர்மானம் உட்பட்ட பல விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்தோம் என்றும் சுமந்திரன் அருவிக்குத் தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: ம.ஆ.சுமந்திரன், இலங்கை