கொரோனா மற்றும் எபோலா வைரஸ்களை விட ஆபத்தான வகை எக்ஸ் வைரஸ் (Disease X) உலகெங்கும் பரவி மனித குலத்தை தாக்கக் கூடும் என எபோலா வைரசை கண்டறிந்த விஞ்ஞானிகள் குழுவைச் சோ்ந்த பெல்ஜியம் மருத்துவ விஞ்ஞானி ஜீன் ஜாக்குவாஸ் டம்பாம் எச்சரித்துள்ளார்.
கொங்கோவை சேர்ந்த பெண் ஒருவருக்கு எபோலா நோய் தொற்று உள்ளதா?என பரிசோதனை செய்யப்பட்டபோது கொரோனாவை விட வேகமாக பரவுகின்ற எக்ஸ் நோயினால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் உலகம் பெரும் பாதிப்புக்களைச் சந்தித்துவரும் நிலையில் ‘எக்ஸ் நோய்’ என்ற அதிபயங்கரமான புதிய நோய் விரைவில் மனித குலத்தை தாக்கக் கூடும் எனவும் அவா் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் மருத்துவ விஞ்ஞானி ஜீன் ஜாக்குவாஸ்டம்பாம் கடந்த 1976-ஆம் ஆண்டு எபோலா வைரசை கண்டறிந்த விஞ்ஞானி பீட்டர் பயட்டுக்கு உதவியாக இருந்தவர். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள இந்த எச்சரிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் மஞ்சள் காய்ச்சல், ரேபிஸ் மற்றும் லைம் நோய் உள்ளிட்ட தொற்றுக்கள் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவின. பின்னர் சிம்பன்சி எனப்படும் வாலில்லா ஆப்ரிக்க காட்டுக் குரங்கில் இருந்து எச்.ஐ.வி. உருவாகி, பின்னர் அது அபாயகரமான நோயாக மாறியது.
தற்போது, ஆப்பிரிக்காவின் காடுகளில் இருந்து எக்ஸ் நோய் என்ற புதிய தொற்று பரவத் தொடங்கி உள்ளது. இந்த வைரஸ் விரைவில் உலக நாடுகளுக்கு பரவும் வாய்ப்புள்ளது. எனவே, இனிவரும் நாட்களில் பல வீரியம் மிகுந்த புதிய வைரஸ்கள் தோன்றக் கூடும். இவை மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். புதிய நோய் தொற்றுக்கள் வெளிவரக்கூடிய சூழலில் நாம் தற்போது இருக்கிறோம் என மருத்துவ விஞ்ஞானி ஜீன் ஜாக்குவாஸ் டம்பாம் தெரிவித்துள்ளார்.
உலகளவில் இதுவரையில் கண்டறியப்படாத புதிய வைரஸ்கள் இனங்காணப்படுமிடத்து அவற்றுக்கு எக்ஸ் எனப் பெயரிடப்படுவது வழக்கம். தொடர்ந்து அது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டபின்னர் புதிய பெயர் இடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புதிய எக்ஸ் வைரஸ் ஒரு சர்வதேச தொற்று நோயாக மாறும் சாத்தியம் உள்ளது.முக்கியத்துவம் அளிக்கக் கூடிய நோய்களின் பட்டியலில் இந்த புதிய நோயும் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது அவசியமாகும் என உலக சுகாதார நிறுவனத்தின் திகாரிகள் எச்சரித்துள்ளனர்.