ஒன்ராறியோ தடுப்பூசி விநியோகத் திட்டங்களுக்கு உடனடியாக இராணுவத்தின் உதவியைக் கோருமாறு டக் போர்ட் அரசாங்கத்திடம் எதிர்க் கட்சியான லிபரல் கட்சியின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவிட் -19 தடுப்பூசிகளை விரைவாகவும் திறம்படவும் விநியோகிக்கவும், நீண்ட கால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் நிலவும் நெருக்கடியை சமாளிக்கவும் டக் போர்ட் அரசாங்கம் திறம்படச் செயற்படும் என்ற நம்பிக்கை தனக்கு எல்லை என ஒன்ராறியோ லிபரல் கட்சித் தலைவர் ஸ்டீவன் டெல் டுகா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தொற்று நோயின் முதல் அலையின்போது ஒன்ராறியோவில் உள்ள ஏழு முதியோர் நீண்ட கால நீண்டகால பராமரிப்பு மையங்களில் கைவிடப்பட்டவர்களை மீட்கவும், பாதுகாக்கவும் இராணுவத்தினர் அழைக்கப்பட்டனர்.
அதனைப் போலவே தற்போது மிக மெதுவாக இடம்பெறும் தடுப்பூசித் திட்டங்களை துரிதப்படுத்தவும், மூத்தோர் இல்லங்களை பராமரிக்கவும் இராணுவத்தின் உதவியை போர்ட் அரசாங்கம் கோர வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் டக் போர்ட் வெற்றுக் கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டு தொடர்ந்தும் செயற்பாடின்றி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஒன்ராறியோவிற்கு ஒரு முக்கியமான தருணம். இந்த நேரத்தில் அர்த்தமுள்ள ஒரு தலைமை மாகாணத்தக்குத் தேவை எனவும் லிபரல் கட்சித் தலைவர் ஸ்டீவன் டெல் டுகா தெரிவித்துள்ளார்.
விடுமுறை நாட்களில் தடுப்பூசி போடும் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்தியது உட்பட தடுப்பூசிப் பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் தொடர்பில் ஒன்ராறியோ அரசாங்கம் ஏற்கனவே கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
இதனையடுத்து தடுப்பூசி போடும் பணிகள் சமீபத்திய நாட்களில் வேகமாக இடம்பெற்று வருகின்றன. செவ்வாயன்று கிட்டத்தட்ட 10,000 தடுப்பூசிகள் மாகாணம் முழுவதும் போடப்பட்டன.
ரொரண்டோ, பீல் பிராந்தியம், யோர்க் பிராந்தியம் மற்றும் வின்ட்சர்-எசெக்ஸ் ஆகிய இடங்களில் உள்ள 161 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் உள்ள அனைவருக்கும் ஜனவரி 21-ஆம் திகதிக்குள் தடுப்பூசி போட முடியும் என்று மாகாண அரசு தெரிவித்துள்ளது.
செவ்வாயன்று குயின்ஸ் பார்க்கில் செய்தியாளர்களிம் பேசிய முதல்வர் டக் போர்ட், இந்த தடுப்பூசிப் பணிகளைத் துரிதப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இரண்டு வாரங்களில் இதில் மேலும் சிறப்பான முன்னேற்றம் இருக்கும் எனவும் அவா் குறிப்பிட்டார்.
இதேவேளை, செவ்வாயன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஒன்ராறியோவில் கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கு உதவ மத்திய அரசு தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
மத்திய அரசு உதவத் தயாராக இருப்பதாக மாகாண அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினார்.
இதேவேளை, நேற்று புதன்கிழமை காலை வரையான நிலவரப்படி 60,000 -க்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ அரசு தெரிவித்துள்ளது. அத்துடன், 860 பேர் இரண்டாவது மற்றும் இறுதி தடுப்பூசியைப் பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா