உலகில் ஏழை மற்றும் செல்வந்த நாடுகளுக்கு இடையே கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் பாகுபாடுகள் குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
இத்தகைய பாகுபாடான தடுப்பூசிக் கொள்கைகளால் உலகம் தார்மீக அடிப்படையில் தோல்வியடையும் என சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை ஜெனீவாவில் இடம்பெற்ற உலக சுகாதார அமைப்பின் செயற்குழுக் கூட்டத்தில் கருத்து வெளியிடும்போதே அவா் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஏழ்மையான நாடுகளில் கொரோனாவால் அதிகம் பாதிப்படக்கூடிய தரப்பினருக்கு கொரோனா தடுப்பூசிகள் கிடைக்க முன்னரே, பணக்கார நாடுகளில் நல்ல உடல் நலத்துடன் உள்ளவர்களுக்கு தடுப்பூசி கிடைப்பது நியாயம் இல்லை எனவும் அவா் தெரிவித்தார்.
இதுவரை பணக்கார நாடுகளில் 39 மில்லின் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் ஒரு ஏழை நாடுகளுக்கு மிக-மிக குறைவான அளவு தடுப்பூசிகளே வழங்கப்பட்டுள்ளதாகவும் கெப்ரியேசஸ் சுட்டிக்காட்டினார்.
இதுவரை, இந்தியா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் தங்களுக்கென தனியாக கொரோனா தடுப்பு மருந்துகளை உருவாக்கிக்கியுள்ளன. ஏனைய பல உலக நாடுகள் பைசர் தடுப்பூசியை பயன்படுத்தி வருகின்றன.
தடுப்பூசியை கண்டுபிடித்து உற்பத்தி செய்யும் பெரும்பாலான நாடுகள் அவற்றின் பெரும் பகுதியை தங்கள் சொந்த நாட்டு மக்களுக்கே முன்னுரிமை அடிப்படையில் வழங்குகின்றன.
இது தார்மீக அடிப்படையில் உலகம் சந்திக்கும் மிகப் பெரிய தோல்வி. இந்தத் தோல்விக்கான விலையாக ஏழை நாடுகளிலுள்ள மக்கள் தங்கள் உயிர்களைப் பலிகொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ் தெரிவித்தார்.
முதலில் எனக்கு தான் தடுப்பூசி என்கிற அணுகுமுறை நம்மை நாமே தோற்கடித்துக் கொள்ளும் விதத்தில் அமையும். இது தடுப்பூசியின் விலையை அதிகரிக்கும். பதுக்கலை ஊக்குவிக்கும். இது போன்ற செயல்களால் கொரோனா நீண்ட நாட்களுக்கு நம்மிடையே நீடிக்கும் எனவும் அவா் குறிப்பிட்டார்.
இதேவேளை, உலக சுகாதார அமைப்பின் உலகப் பொதுத் தடுப்பூசித் திட்டமான கோவேக்ஸ் திட்டத்தில் அனைத்து நாடுகளும் பங்கெடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.