உதயன் பத்திரிகைக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸாரால் தொடரப்பட்டுள்ள வழக்கை தள்ளுபடி செய்யுமாறு ஊடக சுதந்திரத்துக்காகப் போராடி வரும் சர்வதேச ஊடக அமைப்பான எல்லைகளற்ற பத்திரிகையாளர் அமைப்பு (RSF) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தை கோரியுள்ளது.
யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு இயங்கும் உதயன் பத்திரிகைக்கு எதிராக கடந்த மாத ஆரம்பத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர்.
நவம்பர் 26-ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளன்று அவரது புகைப்படத்தை வெளியிட்ட குற்றச்சாட்டில் இந்த வழக்குத் தொடரப்பட்டது.
இதன்மூலம் பயங்கரவாத செயற்பாடுகளை தூண்ட உதயன் முயல்வதாகவும் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பிட்டும் வடையும் சாப்பிட்ட யாழ்ப்பாண மக்களை நாங்கள் பீட்சா சாப்பிட வைத்தோம் என தமிழ் மக்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் கருத்தை அம்பலப்படுத்தியதற்காக திட்டமிட்டு பழிவாங்கும் வகையிலேயே உதயன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக உதயன் குழுமத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் தமிழ் மக்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அனைத்து ஊடக நிறுவனங்களையும் அச்சுறுத்துவதற்கான ஒரு வழியாகவே இந்த வழக்கு கையாளப்படுவதாகவும் சரவணபவன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.