அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற முதல் நாளிளேயே பாரிஸ் பருவ நிலை ஒப்பந்த மீளிணைவு, கட்டாய முக கவசம் அணியும் உத்தரவு உள்ளிட்ட 15 முக்கிய நிர்வாக உத்தரவுகளில் ஜோ பைடன் கையெழுத்திட்டார்.
இதுவரை எந்தவொரு அமெரிக்க ஜனாதிபதியும் பதவியேற்ற முதல் நாளிலேயே இத்தனை அதிக உத்தரவுகளில் கையெழுத்திட்டதில்லை.
பதவியேற்ற முதல் நாளில் டிரம்ப் 8 உத்தரவுகளில் கையெழுத்திட்டார். ஒபாமா 9 உத்தரவுகளில் கையெழுத்திட்டார். ஜோர்ஜ் டபிள்யூ புஷ் 2 உத்தரவுகளிலும் கிளிண்டன் 3 உத்தரவுகளிலும் கையெழுத்திட்டனர்.
இந்நிலையில் அதிரடியாக 15 உத்தரவுகளில் பதவியேற்ற அன்றே பைடன் நேற்று கையெழுத்திட்டார்.
இதில் முக்கியமாகவையாக பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவது மற்றும் அமெரிக்க மக்கள் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக முகக் கவசம் அணிவது அவசியம் ஆகியன அடங்குகின்றன.
நிர்வாக உத்தரவுகளுக்கு மேலாக ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி (executive orders) மெக்ஸிக்கோ எல்லையில் சுவர் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு விடயங்களுக்கும் பயன்படுத்தும் உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டார்.
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காலத்தின் அமுல் செய்யப்பட்ட பாதகமான கொள்கைகளில் மாற்றங்கள் கொண்டுவரும் விடயத்தில் தான் தாமதம் காட்டப் போவதில்லை என் பைடன் முன்னரே அறிவித்திருந்தார்.
கொரோனா வைரஸ் தொற்று நோய் நெருக்கடியால் அமெரிக்கா மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொற்று நோய் கட்டுப்பாடு மற்றும் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை எடுப்பதில் இனியும் காலம் தாழ்த்த முடியாது எனவும் பைடன் குறிப்பிட்டிருந்தமை தெரிந்ததே.