ஒரு ராஜீவ் காந்திக்காக தமிழர்களின் அழிவை வேடிக்கை பார்த்தது போதும், இலங்கையின் செயற்பாட்டிற்கு ஐ.நா.வில் பதிலடி கொடுக்குமாறு இந்தியாவுக்கு தி.மு.க. சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஈழத்தமிழ் ஏதிலி ஒருவர் உள்ளிட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் நால்வர் இலங்கை கடற்படை படகினால் இடித்து கடலில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்திய நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (ஜன-21) இந்திய நாடாளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இதன்போது தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் இந்திய நாடாளுமன்றில் இவ்விடயம் தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"இலங்கையில் சீனா, பாகிஸ்தான் எல்லாம் வந்துவிட்டன. இந்தியா ஏன் அதனைக் கட்டுப்படுத்தவில்லை? ஒரு ராஜீவ் காந்திக்காக இன்னமும் 90 ஆயிரம் தமிழ் மக்களின் இழப்பைக் கருதாமல் இருக்க வேண்டாம். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக வரும் பிரேரணையை இந்தியா ஆதரிக்க வேண்டும்" என்றார் அவர்.
மேற்படி மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து இந்தியத் தரப்பில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
"நடுக்கடலில் ஏற்பட்ட திடீர் கடல் சீற்றத்தால் இந்திய மீனவர்களின் மபடகின் பின்பகுதி இலங்கைக் கடற்படை ரோந்து கப்பலின் மீது மோதியதில் கப்பல் சேதம் அடைந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களைத் தாக்கியதுடன் மற்றொரு ரோந்து கப்பலைக் கொண்டு மீன்பிடிப் படகைத் தாக்கி மூழ்கடித்தனர்" என்று இந்தியத் தரப்பில் கூறப்படுகின்றது.