சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சகிகலா கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 27-ஆம் திகதி தனது தண்டனை முடிந்து சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு அவர் பெங்களூரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை விடுத்துள்ள அறிக்கையில் சசிகாலா கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், தைராய்ட் போன்ற நோய்களுக்கும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
சுவாசத் தொற்று காரணமாக சசிகலாவுக்கு இருமலும் காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது. இன்னும் 2-3 நாட்களில் அவரை விடுவிக்க முடியும் எனவும் சசிகலா அனுமதிக்கப்பட்டுள்ள பௌரிங் அன்ட் லேடி கர்சன் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சசிகலா தண்டனை பெற்ற சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல் குற்றவாளி ஆவார். ஆனால், அவரது மரணத்துக்குப் பிறகே உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்ததால், அவருக்குத் தண்டனை விதிக்கப்படவில்லை.
இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளியான சசிகலா தமக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்திவிட்டார். இதன் அடிப்படையில் அவர் எதிர்வரும் 27-ஆம் திகதி அவர் விடுதலை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா