இலங்கை அரசு இந்தியாவுடன் ஒத்துழைத்துச் செயற்படுவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு இலங்கை அரசு வழங்குவது தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு என்ன என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"இந்தியா இலங்கையினுடைய அயல் நாடாக இருக்கின்றது. எங்களைப் பொறுத்தவரையில் இந்தியாவினுடைய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்ற விதமாக மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளுக்கு நாங்கள் ஒருபோதும் துணைபோக மாட்டோம்.
இலங்கையில் பல இடங்களிலே சீனாவுக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கின்ற சூழலிலே இந்தியா தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்த இடத்தில் இலங்கை அரசு இந்தியாவுடன் ஒத்துழைத்துச் செயற்படுவதுதான் பொருத்தமாக இருக்கும்" - என்றார்.