பொத்துவிலில் தொடங்கிய பேரணி பல்வேறு நெருக்கடிகளைக் கடந்து முல்லைத்தீவின் ஊடாக முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை சென்றடைந்து அங்கு வணக்க நிகழ்வு நடைபெறுகிறது.
இன்று காலை திருகோணமலை நகரில் இருந்து தொடங்கிய பேரணி திருகோணமலை மடத்தடிச் சந்தியை அடைந்தபோது அங்கு நின்ற சிங்கள மொழி பேசுகின்ற கும்பலால் வழி மறிக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இதன் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பயணித்த வாகனத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
அதன் தொடராக வாகனத் தொடரணி புல்மோட்டைப் பகுதியை அண்மித்தபோது, வீதியில் தாரில் ஆணிகள் பொருத்தப்பட்டிருந்த நிலையில் வாகனத் தொடரணியில் பயணித்த எட்டு வாகனங்களுக்கு காற்றுப் போனதால் பயணத்தில் தாமதம் ஏற்பட்டது.
இருந்தபோதிலும் இன்று நண்பலுக்குப் பின்னர் நாயாற்றுப் பகுதி ஊடாக முல்லைத்தீவை நோக்கி பேரணி நகர்ந்தது. நாயாற்றிலே பேரணியை வரவேற்பதற்கு காத்திருந்த பிரமுகர்களை, பொலிஸார் போராட்டத்தில் பங்கேற்கக்கூடாது என்று தெரிவித்து கட்டளையை வழங்கியிருந்தனர்.
இருந்தபோதிலும் போராட்டம் தொடர்ந்தும் நகர்ந்து வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழரசுக்கட்சித் தலை மாவை சேனாதிராஜா உட்பட்ட பிரமுகர்கள் பேரணியில் இணைந்துகொண்டனர்.
முல்லைத்தீவு நகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு பேரணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
தற்போது முள்ளிவாய்க்கால் நினைவுத்திடலில் திரண்டுள்ள பேரணியில் பங்கேற்ற உணர்வாளர்கள் அங்கு வணக்க நிகழ்வில் பங்கெடுத்து வணக்கம் செலுத்தி மதத் தலைவர்களால் சிறப்பு பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், முள்ளிவாய்க்கால்