அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்குக் கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் நோர்த் கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.
27 வயதான டேவிட் கைல் ரீவ்ஸ் என்ற இந்த நபர் ஜோ பைடனைக் கொலை செய்யப்போவதாக பலமுறை மிரட்டல் விடுத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
ஜனவரி 28-ஆம் திகதிக்கும் இம்மாதம் முதலாம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் வெள்ளை மாளிகைக்கு பலமுறை தொலைபேசி அழைப்பெடுத்து இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அத்துடன், இந்த மிரட்டல் குறித்து தன்னை விசாரித்த இரகசியப் பொலிஸ் அதிகாரிக்கும் அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து தேடப்பட்ட இந்த நபர் கடந்த 5-ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார். தொடர்ந்து நோர்த் கரோலினா மாகாண கூட்டாட்சி நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்ட அவருக்கு மனநலப் பரிசோதனை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் சந்தேக நபர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 250,000 டொலர் அபராதமும் விதிக்கப்படலாம் என வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளார்.