சாவகச்சேரி மீசாலை வீரசிங்கம் மத்தியகல்லூரியின் ஆசிரியை ஒருவரின் தாயாருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று கல்லூரி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக அங்கிருந்து அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பெண் ஒருவர் நேற்று அடையாளம் காணப்பட்டிருந்தார்.
சுகவீனம் காரணமாக மருத்துவமனைக்கு சென்ற நிலையில் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது குறித்த பெண் தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் மகள் வீரசிங்கம் மத்தியகல்லூரியில் கற்பிப்பதால் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக கல்லூரிக்குச் சென்ற ஆசிரியர்களும் மாணவர்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
தொற்றுக்குள்ளானவரின் மகன் மன்னாரில் இருந்து வந்து சென்றதாகவும் அவராலேயே தாய்க்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிப்பதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், யாழ்ப்பாணம்