கனடா முழுமையான இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு தனியே மிகப் பெரியளவிலான தடுப்பூசி முயற்சிகளை மட்டுமே நம்பியிருக்க முடியாது என நாட்டில் தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் தெரிவித்துள்ளார்.
ஜூன் 21 -க்குள் நாட்டில் அனைத்து கோவிட்19 கட்டுப்பாடுகளையும் நீக்கும் பாதையில் பிரிட்டன் நகரும் என அந்நாட்டுப் பிரதமர் அறிவித்திருப்பது குறித்துச் சுட்டிக்காட்டிய டாக்டர் தெரசா டாம், கனடா இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்புவதற்தன் பின்னணியில் பல்வேறு காரணிகள் உள்ளதாகவும் கூறினார்.
கனடா இயல்பு நிலைக்கும் திரும்புவதில் தடுப்பூசிகள் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கும் என்பது உண்மையே. அதேவேளையில் ஏனைய விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் டாக்டர் தெரசா டாம் குறிப்பிட்டார்.
தொற்று நோய் குறைதல், மருத்துவமனைச் சேர்க்கையில் ஏற்படும் வீழ்ச்சி, மரணங்கள் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டே நாட்டில் கோவிட்19 கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்த முடிவை எடுக்க முடியும். அத்துடன், பொது சுகாதார வழிகாட்டல்களை முழுமையாகப் பேணவேண்டும். தொற்று தடமறிதல் தொடர்ந்து பேணப்பட வேண்டும் எனவும் டாக்டர் தெரசா டாம் சுட்டிக்காட்டினார்.
அனைவரும் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது சாதாரண வாழ்க்கைக்கு திரும்புவதற்கான முக்கிய படியாகும் எனவும் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் டாம் கூறினார்.
இதேவேளை, இந்த வாரம் 643,000 பைசர்-பயோஎன்டெக் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளை கனடா எதிர்பார்க்கிறது. மார்ச் இறுதிக்குள் ஆறு மில்லியன் தடுப்பூசிகளைப் பெறுவதை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது என இந்தச் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட கனடா கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா