பிரிட்டனிலிருந்து சென்று ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்ந்த சமீமா பேகம் என்ற இளம்பெண் மீண்டும் பிரிட்டனுக்குள் வருவதற்கு அனுமதி அளிக்க மறுத்து பிரிட்டன் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தற்போது 21 வயதான சமீமா பேகம் தனது 15-ஆவது வயதில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்வதற்காக லண்டனிலிருந்து இரண்டு இளம் பெண்களுடன் சிரியாவிற்கு சென்றார். சமீமா பேகம் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளமை குறித்த செய்திகள் 2019ஆம் ஆண்டு முதல் ஊடகங்களில் வெளிவரத் தொடங்கின. இதனையடுத்து தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவரது குடியுரிமையை பிரிட்டன் அரசாங்கம் பறித்தது. இந்நிலையில் தனது குடியுரிமை பறிக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்வுள்ளதாகத் தெரிவித்த சமீமா பேகம், அதற்காக தன்னை பிரிட்டனுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த பிரிட்டன் மேன்முறையீட்டு நீதிமன்றம் சமீமா பேகம் பிரிட்டன் வருவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என கடந்த ஜூலை மாதம் தீர்ப்பளித்தது.
அந்த தீர்ப்பிற்கு எதிராக பிரிட்டன் உள்துறை அமைச்சு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. சமீமாவை பிரிட்டனுக்குள் அனுமதிப்பதால் தேசிய பாதுகாப்பிற்கு அபாயம் ஏற்படும் என்றும் பொதுமக்கள் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றும் உள்துறை அமைச்சு தனது தரப்பு வாதத்தை முன்வைத்தது. இந்நிலையிலேயே மேல் முறையீடு செய்வதற்காக சமீமா பேகத்தை பிரிட்டனுக்குள் அனுமதிக்கக் கூடாது என பிரிட்டன் உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.