சிரியாவின் வட-கிழக்கு பகுதியில் உள்ள அல்-ஹோல் அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்ததுடன், 15 பேர் காயமடைந்துள்ளதாக ஐ.நா. சிறுவர் பாதுகாப்பு நிதியம் தெரிவித்துள்ளது.
வட-கிழக்கு சிரியாவில் உள்ள ஹசகா மாகாணத்தில் சிரியா ஜனநாயகப் படைகள் கூட்டணியில் உள்ள குர்திஷ் இராணுவ அணியினரால் நடத்தப்படும் அகதிகள் முகாம் ஒன்றிலேயே சனிக்கிழமை இந்த துயரம் இடம்பெற்றது. இங்கு பெரும்பாலும் ஐ.எஸ். அமைப்பில் இணைந்து போரிடுபவர்களின் குடும்பங்கள் தங்கியுள்ளன.
இந்நிலையில் அல்-ஹோல் அகதி முகாம் உட்பட சிரியாவின் வட- கிழக்கு பகுதி முகாம்களில் குடும்பங்களைப் பிரிந்துள்ள சிறுவர்களை அவர்களின் குடும்பங்களுடன் மீள ஒன்றிணைக்க வேண்டும் என சிறுவர் பாதுகாப்பு நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான சிரிய சிறுவர்களுடன் குறைந்தது 60 நாடுகளைச் சேர்ந்த 22,000-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த சிறுவர்கள் சிரியாவில் உள்ள அகதி முகாம்களிலும் சிறைகளிலும் உள்ளனர் என ஐ.நா. சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க நாடுகளுக்கான பிராந்திய பணிப்பாளர் டெட் சாய்பான் கூறினார்.
அல்-ஹோலில் உள்ள சிறுவர்கள் தாங்கள் வாழ்வில் களங்கத்தை எதிர்கொண்டு வருகின்றனர். அடிப்படை தேவைகள் கூட இல்லாத மிகவும் கடினமான வாழ்க்கை நிலைமையை அவர்கள் எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆயுதக் குழுக்களில் உள்ளவர்களின் குழந்தைகள் மற்றும் ஆயுதக் குழுக்களுடன் தொடர்புடையவர்களின் குடும்பங்களைச் சோ்ந்த பிள்ளைகள் அதன் அடிப்படையில் தடுத்துவைக்கப்படக்கூடாது எனவும் டெட் சாய்பான் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், சிரியா இடம்பெறும் மோதலுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் சிறுவர்களின் உரிமையை உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கான மனிதாபிமான உதவிகள் தங்குதடையின்றிக் கிடைப்பதற்கு தடை ஏற்படுத்தக் கூடாது எனவும் ஐ.நா. சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க நாடுகளுக்கான பிராந்திய பணிப்பாளர் டெட் சாய்பான் கோரிக்கை விடுத்துள்ளார்.