ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் நிலைகொண்டுள்ள அல் அசாத் விமானத் தளத்தை இலக்குவைத்து அடுத்தடுத்து 10 ரொக்கட் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடாத ஒப்பந்த ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டார். தாக்குதலால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இவா் உயிரிழந்ததாக ஈராக் பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனை விட குறிப்பிடத்தக்க சேதங்கள் எதுவும் நிகழவில்லை என ஈராக் இராணுவம் தெரிவித்துள்ளது.
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பைச் சோ்ந்த ஜிகாதி குழுவை எதிர்த்து போராடும் ஈராக் படைகளுக்கு உதவும் நோக்கில் அமெரிக்கா தலைமையிலான பாதுகாப்புப் படைகள் அல் அசாத் விமானத் தளத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த விமானத் தளத்தை இலக்குவைத்து நேற்று புதன்கிழமை உள்ளூர் நேரப்படி 7:20 மணிக்கு அடுத்தடுத்து 10 ரொக்கட்கள் ஏவித் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளின் செய்தித் தொடர்பாளர் கேணல் வெய்ன் மராட்டோ தெரிவித்துள்ளார்.
அசாத் தளத்தில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அல்-பாக்தாதி எனும் இடத்தில் இருந்து இந்த ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.