நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடந்த வெள்ளிக்கிழமை கடத்திச் செல்லப்பட்ட 279 பாடசாலை மாணவிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் கடத்தப்பட்ட 279 மாணவிகளும் விடுவிக்கப்பட்டு உள்ள செய்தியை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் குழந்தைகள், இப்போது பாதுகாப்பாக உள்ளனர். இந்த மகிழ்ச்சியை நாட்டு மக்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என மாணவிகள் கடத்தப்பட்ட ஜம்பாரா மாகாண ஆளுநர் பெல்லோ மாதவல்லே நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் பாடசாலை மாணவர்களை தீவிரவாதிகள் கடத்திச் செல்லும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன.
இங்குள்ள தீவிரவாதிகள் பணத்துக்காகவும் சிறைகளில் உள்ள தங்கள் அமைப்பினரை விடுவிக்க அழுத்தம் கொடுக்கும் வகையிலும் இவ்வாறு மாணவர்களை அடிக்கடி கடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு அங்கமாகவே கடந்த வாரம் ஜம்பாரா மாகாணத்தின் ஜங்கேபே நகரில் உள்ள மாணவிகள் தங்கிப் படிக்கும் பாடசாலைக்கு துப்பாக்கிகளுடன் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்து 279 மாணவிகளைக் கடத்திச் சென்றனர். இதனையடுத்து இந்த மாணவிகளை மீட்க பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில் கடத்தப்பட்ட அனைத்து மாணவிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.