நியூசிலாந்து கடற்கரைக்கு அருகே தொடர்ச்சியாக மூன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை காரணமாக உயர்வான பகுதிகளை நோக்கி மக்கள் நகர்ந்ததால் நியூசிலாந்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று பின்னிரவு, நியூசிலாந்து உள்ளுர் நேரப்படி வெள்ளி அதிகாலை வேளை 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அதனைத் தொடர்ந்து மேலும் இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் முறையே 7.4, 8.1 ரிக்டர் அளவுகளில் ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் வடகிழக்கில் 620 மைல் தொலைவில் வெள்ளிக்கிழமை காலை 8.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குறித்த நிலநடுக்கம் ஏற்படுத்திய அதிர்வுகளை நியூசிலாந்தின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இதன்காரணமாக நியூசிலாந்து மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் கடற்கரை பகுதிகளில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேறி உயரமான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர்.
இதையடுத்து உயரமான இடங்களை நோக்கி மக்கள் வாகனங்களில் பாதுகாப்புத் தேடி ஒரே நேரத்தில் செல்ல முற்பட்டனர். இதனால் பல இடங்களில் வாகன நெரிசல் காரணமாக பாதைகள் தடைப்பட்டு குழப்பமான நிலை காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது.
சுனாமி அபாய மண்டலங்களிலிருந்தும், அல்லது உள்நாட்டிலிருந்தும் மிக அருகில் உள்ள உயரமான நிலப்பகுதிக்கு உடனடியாக நகர வேண்டும் என்று நியூசிலாந்தின் தேசிய அவசரநிலை முகமை நிறுவனம் தமது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் எவையும் இதுவரை வெளியாகிவில்லை.
குறித்த நிலநடுக்கம் தொடர்பில் GeoNet’s இணையத்தளம் ஊடாக பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 60 ஆயிரத்திற்கு அதிகமான மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளதாகவும், 282 பேர் நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட அதிர்வு கடுமையாக இருந்ததாகவும், அதிர்வு தீவிரமாக உணர்ந்ததாக 75 பேரும் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: நியூசிலாந்து