அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத் தொகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பயங்கரவாதிகள் முயற்சிப்பதாக உளவுத் துறை தகவல்கள் எச்சரித்திருந்த நிலையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து அடுத்துவரும் இரண்டு மாதங்களுக்கு நாடாளுமன்றச் சூழலில் தேசிய பாதுகாப்புப் படையினரை நிலை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது நேற்று வியாழக்கிழமை தாக்குதல் நடத்தி, அதனை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறையான எப்.பி.ஐ. மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறை என்பன இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டன.
அதில் அமெரிக்க நாடாளுமன்றத்தை கைப்பற்றுவது குறித்தும், அதற்கான திட்டங்கள் குறித்தும் பயங்கரவாதிகள் விவாதித்துள்ளனர். அத்துடன் மார்ச் 4-ஆம் திகதிக்குள் ஜனநாயக கட்சி எம்.பி.க்களை அகற்றுவதற்கான சதித் திட்டமும் அவர்களிடம் உள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்ற ஆயிரக்கணக்கானவர்கள் வொஷிங்டன் வருவது குறித்தும் ஆராய்ந்துள்ளனர் எனவும் அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த உளவுத்தகவலை வொஷிங்டன் பொலிஸாரும் உறுதி செய்தனர். மார்ச் 4-ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாதிகள் குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளோம் எனவும் வொஷிங்டன் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதேவேளை, இந்தத் தாக்குதல் எச்சரிக்கை காரணமாக அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகள் சபை கூட்டம் நேற்று இரத்து செய்யப்பட்டது. எனினும் திட்டமிட்டபடி செனட் சபை கூட்டம் நடத்தப்பட்டது.