கொலை முயற்சியில் இருந்து தப்பி நாடு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மொஸ்கோவுக்கு வெளியே உள்ள சிறைக்கு அவரை மாற்ற முயற்சி இடம்பெற்று வரும் நிலையில் முதுகிலும் கால்களிலும் கடுமையான வலி இருப்பதாகவும் அதற்குரிய சிகிச்சை வழங்குமாறும் கோரி நேற்று புதன்கிழமை நவல்னி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை மிகக் கடுமையாக விமர்சித்துவரும் நவல்னி, சிறையில் உள்ள ஒவ்வொரு மணி நேரமும் சித்திரவதைக்குள்ளாவது போன்று உள்ளது எனத் தெரிவித்துள்ளார். உடலில் கடும் வலி உள்ள நிலையில் மருத்துவ சிகிச்சைக்கான தனது கோரிக்கை புறக்கணிக்கப்படுவதாகவும் அவா் கூறியுள்ளார்.
நவல்னியின் சமூக ஊடகக் குழுவினரால் சிகிச்சை கோரி நவால்னி சிறைச் சாலைத் துறையினருக்கு எழுதிய கடிதம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தன்னால் தெரிவு செய்யப்படும் மருத்துவரிடம் சிகிச்சை பெற அனுமதிக்குமாறு நவல்னி வலியுறுத்தியுள்ளார்.
எனக்கு அவசரமாக மருத்துவ உதவி தேவை. ஒவ்வொரு குற்றவாளிக்கும் மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெற்றுக்கொள்ள சட்டப்படி உரிமை உண்டு எனவும் கைப்பட எழுதிய அந்தக் கடிதத்தில் நவல்னி குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவரைப் பார்த்து சிகிச்சை பெற அனுமதிக்கும்வரை எனது உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து இடம்பெறும் எனவும் நவல்னி கூறியுள்ளார்.
இதேவேளை, கடந்த வாரம் நவல்னியை சிறையில் மருத்துவர்கள் பரிசோதித்தனர். அவரது உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.