ஆளும் பொது ஜன முன்னணி கூட்டணியில் உரிய அங்கீகாரம் அளிக்கப்படாமல் ஒதுக்கப்பட்டவராக கருதப்படும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறீ சேன தலைமையில் கூட்டணியின் முக்கிய பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அவசரமாக கூடி சந்தித்துக் கலந்துரையாடியுள்ளமை கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்றிரவு விசேட சந்திப்பு நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர மற்றும் இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பலர் கலந்துகொண்டனர்.
அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான அமைச்சர் விமல் வீரவன்ச, அமைச்சர் உதய கம்மன்பில, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, நாடாளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ விதாரண, ஏ.எல்.எம்.அதாவுல்லா, அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் முன்னாள் அமைச்சர் டியூ. குணசேகர ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சிலருக்கு இடையிலான கருத்து மோதல் வலுவடைந்த நிலையில் குறித்த சம்பவங்கள் மாற்றுத் தெரிவு நோக்கிய திசையில் கூட்டில் இருப்பவர்களை உந்தக்கூடும் என்று தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டிருந்த நிலையில் கடந்தவாரம், கடந்த ஆட்சிக்காலத்தில் தலைமை தாங்கிய பிரமுகர்கள் முக்கிய சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் இளைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரக்கட்சியை உள்ளடக்கிய புதிய கூட்டணி ஒன்றை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
அதேபோல, சில நாட்களுக்கு முன்னர் பௌத்த உயர் பீடங்களின் தேரர்களை சந்தித்த சுதந்திரக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறீசேன சுதந்திரக்கட்சியாக வரவே விரும்புவதாகத் தெரிவித்திருந்தார்.
ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்பட்டபோது ஆளுங்கட்சிக் கூட்டணியில் அங்கத்துவம் பெற்ற சுதந்திரக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பொறுப்புக்களே கொடுக்கப்படாமல் முன்னாள் ஜனாதிபதி உட்பட்டவர்கள் ஒதுக்கப்பட்டதாக கட்சிவட்டாரங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று சுதந்திரக்கட்சியின் தலைமை அலுவலகத்துக்குச் சென்ற பொதுஜன முன்னணியின் 11 கட்சிகளைச் சேர்ந்த அந்தக் கட்சிகளின் தலைவர்கள் மைத்திரிபால தலைமையில் அவசரமாக கூடிக் கலந்துரையாடியுள்ளனர்.
இதனிடையே,
மாகாண சபை சட்ட வரைபு தொடர்பில் ஸ்சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து கலந்துரையாடியதாக நிமால் சிறிபால டிசில்வா தெரிவித்தார். வேறு எந்தவித பயணத்தையும் நாம் மேற்கொள்ளவில்லை என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற அடிப்படையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: மைத்திரிபால சிறிசேன, இலங்கை