Friday 26th of April 2024 02:04:34 AM GMT

LANGUAGE - TAMIL
-
தமிழ் மக்களைத் தொடர்ந்தும் பயப்பீதியில் வைத்திருக்க விரும்புகின்றது அரசு - கூட்டமைப்பு கண்டனம்!

தமிழ் மக்களைத் தொடர்ந்தும் பயப்பீதியில் வைத்திருக்க விரும்புகின்றது அரசு - கூட்டமைப்பு கண்டனம்!


"தமிழ் மக்களைத் தொடர்ந்தும் பயப்பீதியில் வைத்திருப்பதையே அரசு விரும்புகின்றது. இதன் வெளிப்பாடாகவே யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டுள்ளார்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"யாழ்ப்பாணம் மாநகர மேயர் மணிவண்ணன் விசாரணையின் நிமிர்த்தம் யாழ். பொலிஸாரால் அழைக்கப்பட்டு அதிகாலை வேளையில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு வவுனியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்தத் திட்டமிட்ட கைது நடவடிக்கையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

யாழ்ப்பாணம் மாநகர சபையும் ஏனைய மாநகர சபைகளைப் போன்று மாநகர சபைகளுக்குரிய அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்த முனைகின்றபோது இவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன.

அரசு இந்தக் கேவலமான நடவடிக்கைகளை உடன் நிறுத்த வேண்டும். கைதுசெய்யப்பட்டுள்ள யாழ். மாநகர மேயரை உடனடியாக விடுவிக்க வேண்டும்" - என்றார்.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் ரெலோவின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

"தமிழர்களின் நிர்வாகத் திறமையைச் சகித்துக்கொள்ள முடியாத சிங்கள அரசு யாழ், மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணனைக் கைதுசெய்துள்ளது. இதை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இத்தனை வருடங்களாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் இந்த அரசால் ஒரு மாநகர சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்கும் செயற்பாட்டை அவர்களால் செய்ய முடியவில்லை. அதனை ஒரு தமிழன் செய்து விட்டான் என்ற காழ்ப்புணர்ச்சியில் இந்தக் கைது நாடகம் அரங்கேறியுள்ளது.

சீருடை காரணமாக யாழ். மாநகர காவல் படையைத் தடை செய்து மேயர் மணிவண்ணனைக் கைதுசெய்துள்ளது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.

யாழ். மாநகர காவல் படையினரின் இதே வகையிலான சீருடை கொழும்பு மாநகர சபையிலும் உள்ளது என யாழ். மாநகர மேயர் மணிவண்ணன் விளக்கம் அளித்திருந்தார்.

அவ்வாறு விளக்கமளித்தும் அவரைக் கைதுசெய்திருப்பது இந்த அரசு தமிழர்கள் எந்த வகையிலும் முன்னேறி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதை எடுத்துக்காட்டுகின்றது.

சாதாரண சீருடையைப் பார்த்து அரசு அச்சம் கொள்வது எதற்காக என்று எமக்குத் தெரியவில்லை. எனவே, கைதுசெய்யப்பட்டுள்ள யாழ். மாநகர மேயர் மணிவண்ணனை உடனடியாக விடுதலை செய்வதோடு யாழ். மாநகரை சுத்தப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட மாநகர காவல் படை சுதந்திரமாக இயங்குவதற்கும் அரசு அனுமதிக்க வேண்டும்" - என்றுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE