தமிழ் - சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, கடந்த நான்கு நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்களின் மூலம், 135 மில்லியன் (13.5 கோடி) ரூபாவுக்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளது என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் செயற்பாட்டுப் பிரிவு பதில் பணிப்பாளர் நிஹால் லொட்றிக் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 8ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அதிக வாகனங்கள் பயணித்துள்ளன.
கடந்த 10ஆம் திகதி ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 187 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளன. இதன்மூலம் 38 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
அதேபோல, கடந்த 9ஆம் திகதி, ஒரு இலட்சத்து 37 ஆயிரத்து 721 வாகனங்கள், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளன. இதன்மூலம் 35 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது என அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் செயற்பாட்டு பிரிவு பதில் பணிப்பாளர் நிஹால் லொட்றிக் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் இந்த வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.