ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படையினரை முற்றாக விலக்கிக் கொள்ளவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
தலிபான்களுக்கு எதிரான அமெரிக்காவின் நீண்ட போரை முடிவுக்குக் கொண்டுவரவேண்டிய நேரம் இது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது படைகளை விலக்கிக்கொண்ட பின்னரும் ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவாக இருப்போம் எனவும் அவா் கூறினார்.
அமெரிக்காவின் வர்த்தக மைய இரட்டைக் கோபுரங்கள் மீது 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11 திகதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளில் நிலைகள் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து அங்கு அமெரிக்கப் படைகள் அனுப்பிவைக்கப்பட்டன.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் 2001-ஆம் ஆண்டு தாக்குதலுக்காக உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அதே அறையில் இருந்து போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பான உரையை நேற்று பைடன் ஆற்றினார்.
செப்டம்பர் 11 தாக்குதலின் 20-ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி இந்த படை விலக்கல் நடக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேட்டோ கூட்டணி நாடுகள் சார்பில் ஆப்கானிஸ்தானில் தற்போது 9,600 படையினர் நிலைகொண்டுள்ளனர். இதில் அமெரிக்கப் படையினர் மட்டும் குறைந்தது 2,500 பேர் உள்ளனர்.
அமெரிக்கா தனது படைகளை விலக்கிக்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் தலிபான்களுடன் ஆப்கான் அரசு சமாதானப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளது.
படைகளை விலக்கிக்கொள்ளும் அமெரிக்காவின் இந்த முடிவை மதிப்பதாகத் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனி, சுமுகமான முறையில் படைகளை விலக்கிக்கொள்வது குறித்து அமெரிக்க ஜனாதிபதியுடன் நேற்று புதன்கிழமை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும் கூறியுள்ளார்.
எங்கள் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் வல்லமை எங்கள் படைகளுக்கு முழுமையாக இருக்கிறது எனவும் அவா் தெரிவித்தார்.